கோவை: கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக கேரளாவில் பாரம்பரிய பண்டிகையான ஓணம் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கோவையைச் சேர்ந்த கல்லூரி ஒன்று அம்மாநிலத்திற்கு உதவும் மனப்பான்மையை மறந்து ஓணத்தைக் கொண்டாடியிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக கேரளாவில் பாரம்பரிய பண்டிகையான ஓணம் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கோவையைச் சேர்ந்த பிஷப் அப்பாசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அம்மாநிலத்திற்கு உதவும் மனப்பான்மையை மறந்து ஓணத்தைக் கொண்டாடியிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. வயநாடு, இடுக்கி, கண்ணூர், கோழிக்கூடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் இந்த கனமழைக்கு சீர்குலைந்து போயின. சுமார் 50 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. மழையால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு தமிழகம் மற்றும் பிற அண்டை மாநிலங்கள் ஆதரவுக் கரம் நீட்டி வருகின்றன. குறிப்பாக, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து நிவாரணப் பொருட்கள் பல்வேறு கட்டங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
மேலும், கேரள மக்கள் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பெரும் துயரத்திற்கு ஆளாகியிருப்பதால், இந்த ஆண்டு ஓணம் கொண்டாட்டங்களை ரத்து செய்வதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும், அங்கு சுதந்திர நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு, அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது. இதேபோல, பிற மாநிலங்களிலோ அல்லது மாவட்டங்களிலோ உள்ள கல்லூரிகள், பள்ளிகளும் ஓணப் பண்டிகையை புறக்கணித்ததோடு மட்டுமில்லாமல், நிதி சேகரித்து கேரளாவிற்கு நிவாரணத் தொகையாக அனுப்பி வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த வாரம் கோவையில் செயல்படும் கல்லூரி ஒன்றில், சில மாணவர்கள் பிற மாணவர்களிடம் பணம் திரட்டி ஓணம் பண்டிகைக் கொண்டாடியுள்ளனர். கேரளாவின் பாரம்பரிய ஆடை அணிந்து மாணவ, மாணவிகள் இந்தப் பண்டிகையை சிறப்பித்துள்ளனர். பாரம்பரிய பண்டிகையை கொண்டாட வேண்டிய கேரளாவே, இந்த ஆண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்துள்ள நிலையில், அண்டை மாவட்டமான கோவையில் உள்ள கல்லூரியில் ஓணம் அவசியம் தானா..? என்ற கேள்வி அனைவரிடத்தில் எழுந்துள்ளது.
இது தொடர்பாக சிம்ப்ளிசிட்டி சார்பில் கல்லூரி நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு கேட்டறிய முயற்சித்தும், எந்தவித தொடர்பும் கிடைக்கவில்லை.