நீலகிரி: பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள அபாயகரமான மரங்களை அகற்ற நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி: பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள அபாயகரமான மரங்களை அகற்ற நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கூடலூர், குந்தா, பந்தலூர், அப்பர் பவானி, தேவாலா, உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலையோரங்களில் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக உதகை, கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் பிங்கர் போஸ்ட் பகுதியில் ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்ததில் 18 வயது இளைஞர் உயிரிழந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சாலையோரங்களில் உள்ள அபாயகரமான மரங்களை அகற்ற வேண்டும் என்று பல தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, சாலையோரங்கள், பள்ளி, கல்லூரிகள், குடியிருப்பு பகுதிகள் என பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் உள்ள அபாயகரமான மரங்களைக் கணக்கெடுக்க மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார்.

மாவட்டம் முழுவதும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள அபாயகரமான மரங்கள் கணக்கெடுக்கப்பட்டு அவற்றை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் துரிதகதியில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது உதகை, குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், "நீலகிரியில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதால், மேலும் எந்தவித அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வண்ணம் தற்போது போர்க்கால அடிப்படையில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது." என்றார்.