கோவை: தொடர்ந்து ஆறாவது நாளாக நீடிக்கும் லாரி உரிமையாளர்களின் போராட்டம் காரணமாக கோவையில் சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான வர்த்தகம் தேக்கமடைந்துள்ளது.
கோவை: தொடர்ந்து ஆறாவது நாளாக நீடிக்கும் லாரி உரிமையாளர்களின் போராட்டம் காரணமாக கோவையில் சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான வர்த்தகம் தேக்கமடைந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுங்க கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணிகளைக் கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த 20-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து, ஆறாவது நாளாக தொடரும் இந்த போராட்டம் காரணமாக தமிழகத்தில் மட்டும் சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் வரை வர்த்தக தேக்கம் அடைந்துள்ளதாகவும், பல நூறு கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாகவும் லாரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கோவையைப் பொறுத்தவரையில், சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான வர்த்தகம் தேக்கமடைந்துள்ளதாகவும், அதனால் ரூ.40 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கோவை லாரி உரிமையாளர் சங்க தலைவர் கலியபெருமாள் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "தொழில் நகரமான கோவையில் சரக்குகளை வெளி மாநிலங்களுக்கு அனுப்ப முடியாமலும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமலும் சுமார் 300 கோடி ரூபாய் வரை வர்த்தகம் தேக்கம் அடைந்துள்ளது. அதனால் ரூ.40 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களை பெரிதும் பாதிப்பதிற்குள் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்." என்றார்.
இந்நிலையில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோயமுத்தூர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு இதுவரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும், உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனில், படிப்படியாக அத்தியாவசிய பொருட்கள் நிறுத்தப்படுமெனவும் அவ்வமைப்பின் தலைவர் கலியபெருமாள் தெரிவித்தார்.