கோவை: கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்படும் 'ஸ்மார்ட் டாய்லெட்' பொதுமக்களும், பயணிகளும் பயன்படுத்த முடியாத இடத்தில் கட்டப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
கோவை: கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்படும் 'ஸ்மார்ட் டாய்லெட்' பொதுமக்களும், பயணிகளும் பயன்படுத்த முடியாத இடத்தில் கட்டப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
தூய்மை நகரங்களின் பட்டியலில் கடந்த இரண்டு வருடங்களாகக் கோவை மாநகரம் தொடர்ந்து 16-வது இடத்தை தக்கவைத்துள்ளது. இருந்தும் நகரின் முக்கிய சாலைகளிலும். சந்துகளிலும் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பதும், எச்சில் துப்புவதும், குப்பைகளைக் கொட்டுவதும் தொடர்கதையாக உள்ளது.
மத்திய அரசின் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் மத்தியில் தூய்மை பாரதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, நகரின் முக்கிய பகுதிகளில் ஸ்மார்ட் கழிப்பறைகளை மாநகராட்சி நிர்வாகம் கட்டி வருகிறது.

கடந்த வாரம் பாலசுந்தரம் சாலையில் உள்ள மகளிர் தொழிற்கல்வி மையம் எதிரில் ரூ. 98 லட்சம் செலவில் நவீன இலவச கழிப்பறை வசதி மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. சிறுநீர் கழிக்க தனிவசதி, நவீன கழிப்பறை, குளியலறை, கை கால் கழுவும் இடம், ஆளுயர கண்ணாடி மற்றும் மின் விளக்குகள் என உயர்தர வசதிகளோடு இவை உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்தக் கழிவறையில் இலவச வைஃபை வசதி வழங்கப்படுகிறது. விமானம் மற்றும் ரயில் நிலையத்திற்கு செல்லும் பயணிகளுக்காக இந்த இலவச வைஃபை வசதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், இந்த 'ஸ்மார்ட் டாய்லெட்' ரயில் நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தூரத்தில் உள்ளது. அருகில் உள்ள காந்திபுரம் பகுதியில் நஞ்சப்பா சாலையில் இதே போல் மற்றோரு 'ஸ்மார்ட் டாய்லெட்' உள்ளது. இதனால், திறக்கப்பட்ட நாளிலிருந்து தற்போது வரை இவை வெறிச்சோடி காணப்படுகிறது.
"காந்திபுரத்தில் இறங்கி ரயில்நிலையம் செல்லும் பயணிகள் பாலசுந்தரம் சாலைக்கு வருவதில்லை. நஞ்சப்பா சாலையை மட்டுமே பயன்படுத்துவர். பயணிகளின் வசதிக்காக அந்த சாலையில் பேருந்து நிலையம் அருகிலேயே நவீன கழிப்பிட வசதி உள்ளது. எனவே, பயணிகள் இந்த கழிப்பறையை பயன்படுத்த வாய்ப்பில்லை. வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதியுமில்லை. இதற்கு பதிலாக, திறந்தவெளி கழிப்பிடமாக மாறியுள்ள ரயில் நிலையம் அருகில் உள்ள லங்கா கார்னர் பகுதியிலோ, அரசு மருத்துவமனை எதிரிலோ, காட்டூர் மில் சாலையிலோ கட்டியிருந்தால் பொதுமக்களும் பயணிகளும் பயன் அடைந்திருப்பர்," என்கிறார் பயணி முகிலன்.
பல லட்சங்களில் கட்டப்படும் இந்த நவீன இலவச கழிப்பறைகள் தனியார் நிறுவனத்தினரால் பராமரிக்கப்படுகிறது. அவர்களுக்கான பராமரிப்பு தொகை இங்கு அமைக்கப்படும் பிரம்மாண்ட விளம்பர பேனர் கட்டணத்தில் இருந்து வழங்கப்படுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஆனால், காந்திபுரத்தில் உள்ள ஸ்மார்ட் டாய்லெட்டில் சில மாதங்களுக்கு முன் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

'போக்குவரத்து சந்திப்பிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் மட்டுமே விளம்பர பலகைகள் வைக்கப்பட வேண்டும். வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் சாலைகளில் விளம்பர பலகைகள் வைக்கக்கூடாது என்பது அரசின் விதிமுறைகள். ஆனால், காந்திபுரம் மற்றும் பாலசுந்தரம் சாலையில் உருவாக்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட் டாய்லெட்டுகளில் உள்ள பிரம்மாண்ட விளம்பர பலகைகள் அரசின் விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு ஸ்மார்ட் டாய்லெட்டுகளை கட்டுவதற்கான இடத்தைத் தேர்வு செய்யவில்லை. மாறாக, விளம்பரம் செய்பவர்களின் பயனுக்காகவும், சுய விளம்பரத்துக்காகவும் மட்டுமே பல லட்சங்களில் இந்த ஸ்மார்ட் டாய்லெட்டுகள் கட்டப்படுவது வெளிப்படையாகவே தெரிகிறது' என்கிறார் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பைச் சேர்ந்த கதிர்மதியோன்.
தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் பாலசுந்தரம் சாலையை தொடர்ந்து, நகரின் பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட் டாய்லெட்டுகள் கட்டுவதற்கான பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது.
மக்களுக்குப் பயன்படும் வகையில் அனைத்து நவீன இலவச கழிப்பறைகளும் கட்டப்பட வேண்டும். கட்டணம் வசூலிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிப்பறை அருகிலே வாகனங்கள் நிறுத்துவதற்கான இடவசதி உருவாக்கிட வேண்டும் என்பதே மக்களின் ஒருமித்த கோரிக்கை குரலாக ஒலிக்கிறது.