கோவை: பெங்களூரூ இடையேயான உதய் எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவை வரும் 8-ம் தேதி மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் ராஜன் கோகெயின் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
கோவை: பெங்களூரூ இடையேயான உதய் எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவை வரும் 8-ம் தேதி மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் ராஜன் கோகெயின் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
கோவையிலிருந்து பெங்களூரூக்கு உதய் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என கடந்த 2016-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் இத்திட்டம் இழுபறியில் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உதய் எக்ஸ்பிரஸ் இயக்கும் பொருட்டு முதற்கட்டமாக இரட்டை அடுக்குமாடி பெட்டிகள் சோதனை ஓட்டத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த சோதனை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து கோவை – பெங்களூர் இடையே இயக்கப்படும் உதய் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இரட்டை அடுக்குமாடி கொண்ட பெட்டிகள் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காக பிரத்தியேகமான பெட்டிகள் கபூர்தாலவில் தயாரிக்கப்பட்டு வந்தது. ஆனால், அங்கு காலதாமதம் நிலவியதால் சென்னை ஐ.சி.எப்.பில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டது. புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் இரட்டை அடுக்கு ரயில் பெட்டியில் சாய்வு வசதியுடன் கூடிய 114 இருக்கைகள் இருக்கும். முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் தயாரிக்கப்பட்டு வரும் இந்த ரயிலின் அனைத்துப் பெட்டிகளிலும் பெரிய எல்.சி.டி., டிவி பொருத்தப்பட்டிருக்கும். காபி மேக்கர், ஒலிபெருக்கி போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இப்பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது.

இந்த ரயில் கோவையில் இருந்து காலை 5.45-க்கு புறப்பட்டு, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக மதியம் 12.40-க்கு பெங்களூர் சென்றடையும். இதேபோல், பெங்களூரில் இருந்து மதியம் 2.15-க்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு கோவை வந்தடையும்.
தற்போது அனைத்துப் பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், நாளை மறுநாள் (ஜூன் 08) கோவை - பெங்களூரூ இடையேயான உதய் எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவையை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் ராஜன் கோகெயின் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.


