காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணத்தில் திடீரென திருப்பம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணத்தில் திடீரென திருப்பம் ஏற்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சசிதரூர் (61) இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ளார். இந்நிலையில் காஷ்மீர் தொழிலதிபர் சுனந்தா புஷ்கரை (52) காதலித்து மணந்து கொண்டார். இந்த சூழலில் பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹர் தரார் உடன், சசிதரூர் இணைத்துப் பேசப்பட்டார். இதனால் சசிதரூர் - சுனந்தா இடையே சண்டைகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கடந்த 2014 ஜனவரி 17-ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள தனியார் ஓட்டல் அறையில் சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
சுனந்தாவின் உடலைப் பிரேத பரிசோதனை செய்த எய்ம்ஸ் மருத்துவர்குழு அவருடைய உடலில் விஷம் கலந்து இருந்தது என்று கூறி இருந்தது. இதுபற்றி விசாரணை நடத்தி வந்த டெல்லி போலீசின் சிறப்பு விசாரணைக் குழு, சுனந்தாவின் குடல் பாகங்களை அமெரிக்காவுக்கு அனுப்பி அந்நாட்டின் எப்.பி.ஐ. புலனாய்வு துறை மூலம் ஆய்வக பரிசோதனையும் மேற்கொண்டது. அதில், சுனந்தாவின் உடலில் கதிரியக்க பொருட்கள் இருந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து, எப்.பி.ஐ. மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் அளித்த மருத்துவ அறிக்கையை ஆய்வு செய்வது இறுதி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்வதற்காக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் எய்ம்ஸ் மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவும் தனது அறிக்கையை சிறப்பு விசாரணை குழுவிடம் அண்மையில் தாக்கல் செய்தது. மேலும் சுனந்தாவின் செல்போனில் இருந்து நீக்கப்பட்ட போன் உரையாடல்களை பெற்று அதன் அடிப்படையில் இந்த வழக்குகின் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இந்த நிலையில், பாட்டியாலா நீதிமன்றத்தில் மெட்ரோபாலிடன் மேஜஸ்டிரேட் தர்மேந்தர் சிங்கிடம், டெல்லி போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், சுனந்தா புஷ்கரின் மரணம் தற்கொலையே. கொலை அல்ல என்று கூறப்பட்டுள்ளது. மேலும், கணவர் சசிதரூர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், கொடுமைப்படுத்துதல் ஆகியவற்றிற்காக இந்திய தண்டனைச் சட்டம் 306 மற்றும் 498ஏ கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுனந்தா வழக்கில் 4 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சசிதரூர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது இவ்வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது குறித்து சசிதரூர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த அபாயகரமான குற்றச்சாட்டு தாக்கல் செய்வதை நான் கவனத்தில் எடுத்துள்ளேன். சுனந்தா தற்கொலை ஏதும் செய்திருக்க மாட்டார் எனக் கூறுபவர்கள், என் மீது வெறுப்புணர்வு கொண்டிருப்பார்கள். இந்த வழக்கில் 4 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடந்து வருகிறது. டெல்லி போலீசாரின் நடவடிக்கை குறித்து கருத்து கூற முடியவில்லை. கடந்த அக்.,17-ம் தேதி சட்ட அதிகாரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், யாருக்கு எதிராகவும் எந்தக் குற்றச்சாட்டும் வைக்கவில்லை. இதைத் தொடர்ந்து, சுமார் 6 மாதங்களில் சுனந்தா தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார்கள். இது நம்பமுடியாத வகையில் இருக்கிறது..!" எனக் கூறியுள்ளார்.

இதேபோல, சுனந்தா புஷ்கர் வழக்கில் டெல்லி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது குறித்து பா.ஜ.க., எம்.பி., சுப்ரமணியசுவாமி கருத்து கூறியதாவது :- காங்கிரஸ் அரசு மற்றும் லஞ்ச போலீசாரால் அனைத்து சாட்சிகளும், ஆவணங்களும் அழிக்கப்பட்டு விட்டது. தற்போதைய ஆதாரங்களை வைத்து என்ன செய்ய முடியும். விசாரணையின் போது மேலும் தகவல்கள் வெளியே வரும். என்றார்.