கோவை: இந்தியாவிலேயே முதன் முறையாக மாநகராட்சியின் சார்பில் தொடங்கப்பட்டு கோவையில் இயங்கி வரும் 'சின்தடிக் ஸ்கேட்டிங்' மைதானத்தில் அடிப்படை வசதிகள் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவை: இந்தியாவிலேயே முதன் முறையாக மாநகராட்சியின் சார்பில் தொடங்கப்பட்டு கோவையில் இயங்கி வரும் 'சின்தடிக் ஸ்கேட்டிங்' மைதானத்தில் அடிப்படை வசதிகள் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவை வ.உ.சி பூங்கா அருகே ரூ.48.62 லட்சம் செலவில் சின்தடிக் ஸ்கேட்டிங் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இத்தகைய மைதானம் எந்த ஒரு மாநகராட்சியாலும் நிர்வகிக்கப்படாத நிலையில், கோவை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த சின்தடிக் ஸ்கேட்டிங் மைதானம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த மைதானத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார்.
பயிற்சி
210.48 மீட்டர் நீளம், 6 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்ட இந்த சின்தடிக் ஸ்கேட்டிங் மைதானத்தில், சிறப்பான முறையில் ஸ்கேட்டிங் பயிற்சி வகுப்புகளை நடத்தி, சிறந்த வீரர்-வீராங்கனைகளை கோவையிலிருந்து உருவாக்கும் வகையில் கோவை மாவட்ட ஸ்கேட்டிங் சங்கத்தினரிடம் இந்த மைதானத்தை மாநகராட்சி நிர்வாகம் ஒப்படைத்துள்ளது. ஆரம்ப பயிற்சி வகுப்புகள் மற்றும் சிறப்பு பயிற்சி வகுப்புகள் என்று பிரிக்கப்பட்டு, 4 வயதிலிருந்து 15 வயது வரையிலான 300-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் இந்த மைதானத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த விளையாட்டில் ஆர்வம் கொண்ட கோவையைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இங்கு தினமும் காலை 5 மணி முதல் 8 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் பயிற்சி செய்து வருகின்றனர்.

கட்டணம்
இது போன்று கோவையில் தனியார் பயிற்சி நிலையங்களில் சார்பில் அமைக்கப்பட்ட சின்தடிக் ஸ்கேட்டிங் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்வதற்கு ரூ.3000-க்கும் மேல் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில், இங்கு ரூ. 500 முதல் ரூ. 1000 வரை மட்டுமே பயிற்சி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும், ஸ்கேட்டிங் விளையாட்டில் ஆர்வம் மிக்க மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு இலவசமாக ஸ்கேட்டிங் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ஸ்கேட்டிங் சங்கத்தால் வசூலிக்கப்படும் இந்த கட்டணத்தில் 50 சதவீத தொகை மாநகராட்சிக்குச் செலுத்தப்படுகிறது. மீதமுள்ள தொகை பயிற்றுனர் சம்பளம் மற்றும் பராமரிப்பு செலவுகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

ஸ்கேட்டிங் விளையாட்டில் ஆர்வமும் திறமையும் உள்ள மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு, பயிற்சி உபகரணங்கள் வாங்கி, வழங்கிடவும் பயிற்சிக் கட்டணம் மற்றும் செலவினங்களை மாநகராட்சி நிதியிலிருந்து வழங்கவும் திட்டமிடப்பட்டது. அதன்படி, இந்த நிதியாண்டில் மாநகராட்சி பட்ஜெட்டில் இருந்து ரூ. 10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு
இத்தகைய சிறப்புகளை கொண்டிருக்கும் ஸ்கேட்டிங் மைதான வளாகத்தில், கழிப்பறை, ஓய்வறை, நிழற் கூறை, தடுப்பு வேலி, மழை நீர் வடிகால் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து மைதானத்தில் பயிற்சி பெற்று வரும் இளம் ஸ்கேட்டிங் வீரர்கள் கூறுகையில், "தினமும் அதிகாலையிலேயே பயிற்சி செய்யத் தொடங்கிவிடுவோம். ஸ்கேட்டிங் மைதானத்தை ஒட்டி கழிப்பறை வசதி இல்லாததால் பூங்கா அருகே உள்ள பொது கட்டண கழிவறையை பயன்படுத்த வேண்டியுள்ளது.
நிழற் கூறையோ, ஓய்வு அறையோ இல்லாததால் பெற்றோர்களும், குழந்தைகளும் மழை நேரங்களில் பயிற்சி செய்யாமல் வீட்டிற்கு சென்றுவிடுகின்றனர். தடுப்பு வேலி இல்லாததால் அருகே உள்ள பூங்காவில் இருந்து சிறுவர்கள் மைதானத்திற்குள் குதிக்கின்றனர். மேலும், வடிகால் வசதி இல்லாததால் மைதானம் அருகே மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த பிரச்சனைகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டால் இன்னும் சிறப்பாக பயிற்சி செய்ய முடியும்" என்ற கோரிக்கை முன்வைத்தனர்.
கடந்த டிசம்பர் மாதம், இந்த மைதானத்தில் 27-வது மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றது. அதில், கோவை மாவட்டம் இரண்டாம் இடம் பிடித்தது. பிற மாவட்டங்களில் இருந்து வந்த ஸ்கேட்டிங் வீரர்களும் இதே பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் சங்கத்தின் துணை செயலாளரும், கோவை மாவட்ட ஸ்கேட்டிங் சங்கத்தின் செயலாளருமான சந்திரசேகர் நமக்களித்த பேட்டியில் கூறுகையில், "தேசிய அளவில் மாநகராட்சியால் உருவாக்கப்பட்ட முதல் சின்தடிக் ஸ்கேட்டிங் மைதானம் கோவையில் தான் உள்ளது. மிகக் குறைந்த கட்டணத்தில் ஆர்வமுள்ள வீரர்களுக்கு சிறப்பான பயிற்றுனர்களைக் கொண்டு ஸ்கேட்டிங் பயிற்சி அளித்து வருகிறோம். கோவையைச் சேர்ந்த ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஸ்கேட்டிங் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஸ்கேட்டிங் போட்டிகளில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு கோட்டா அடிப்படையில் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கிறது. ஸ்கேட்டிங் மைதான வளாகம் அருகில் கழிப்பறை கட்டவும், தடுப்பு வேலி அமைக்கவும் மாநகராட்சியிடம் கோரிக்கை வைத்துள்ளோம். விரைவில் இந்த வசதிகள் உருவாக்கித் தரப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்." என்றார்.
வரும் செப்டம்பர் மாதத்தில் மாவட்டம் மற்றும் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், கூடிய விரைவில் வசதிகளை செய்து கொடுத்து ஸ்கேட்டிங் வீரர்களை மாநகராட்சி நிர்வாகம் ஊக்குவிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.