கோவை: கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை அதிகாரியான டி எஸ் பி விஷ்ணுபிரியா மரணம், தற்கொலைதான் எனக் கூறி இந்த வழக்கை முடித்து கொள்வதாகக் கூறி சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கோவை: கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை அதிகாரியான டி எஸ் பி விஷ்ணுபிரியா மரணம், தற்கொலைதான் எனக் கூறி இந்த வழக்கை முடித்து கொள்வதாகக் கூறி சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கோகுல்ராஜ் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தத் தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரித்து வந்த நிலையில், அதனை சி.பி.ஐ.,க்கு மாற்றம் செய்யக் கோரி விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனடிப்படையில் வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது.
இந்த சூழலில் கடந்த டிசம்பர் மாதம் விசாரணையை முடித்துக் கொண்ட சி.பி.ஐ., கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது. அதில், விஷ்ணுபிரியா மரணம் தற்கொலையே. தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லாததால் விசாரணையை முடித்துக் கொள்வதாக கூறியிருந்தது. இதையடுத்து, கோவை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம் சி.பி.ஐ., அறிக்கையின் முகாந்திரத்தைச் சுட்டிக்காட்டி விஷ்ணு பிரியாவின் தந்தைக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதில், சி.பி.ஐ., அறிக்கையில் ஏதேனும் கருத்துக்கள் கூற விரும்பினால் வருகிற 9-ம் தேதி கோவை நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதன்படி, நாளை மறுதினம் கோவை வரும் அவரது தந்தை, சி.பி.ஐ., அறிக்கையைப் படித்து பார்த்த பின்பு, அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.