கோவை: 29 வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு கோவை ஒப்பணக்கார வீதியில் சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்றி வரும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் இனிப்பு வழங்கி உற்சாகப்படுத்தினர்.
கோவை: 29 வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு கோவை ஒப்பணக்கார வீதியில் சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்றி வரும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் இனிப்பு வழங்கி உற்சாகப்படுத்தினர்.
போக்குவரத்து விழிப்புணர்வுகளை பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி 29-வது ஆண்டு சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு கோவை மாநகர போக்குவரத்து போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா மற்றும் துணை ஆணையாளர் (போக்குவரத்து) சுஜித்குமார் உத்தரவின் பேரில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதன்படி, இன்று கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய நோட்டிஸ் வழங்கப்பட்டது. மேலும், சாலை விதிகளை முறையாக கடைபிடித்த வாகன ஓட்டிகளுக்கு போலீசார் இனிப்புகளை வழங்கி உற்சாகப்படுத்தினர்.

மேலும், அதிக சத்தம் தரும் ஏர் ஹாரன் அடிப்பதை நிறுத்தவும், ஹெல்மெட் அணிந்து சங்கிலி பறிக்கும் கொள்ளையர்களை பிடிக்க உதவியாக, வாகனங்களின் எண்களை கவனிக்கும் பழக்கத்திற்கு பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றும் இந்த விழிப்புணர்வில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து போக்குவரத்து ஆய்வாளர் சதாசிவம் கூறியதாவது:-
பேருந்து ஓட்டுனர்கள் தேவையற்ற ஹாரன் அடிப்பதை நிறுத்த வேண்டும். இதில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை கட்டுப்படுத்த வட்டார போக்குவரத்து அலுவலர்களுடன் இணைந்து இந்த ஆண்டில் உக்கடம், காந்திபுரம், சுங்கம் என்ற பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினோம். அதன்படி, 28 பேருந்துகள் மீது வழக்குகளை பதிவு செய்துள்ளோம்.
போக்குவரத்து போலீசாரின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் விபத்தில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதாவது 2017-ல் நடப்பு மாதம் வரை விபத்தில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 100-ஆக இருந்தது.தற்போது 2018-ல் இறப்பு எண்ணிக்கை 66-ஆக குறைந்துள்ளது. விதிகளைப் பின்பற்றுபவர்களின் எண்ணிகை அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம்.
பொதுமக்கள் அவர்கள் பகுதி காவல் நிலையத்தின் ஆய்வாளர், காவல் நிலைய தொலைபேசி எண், முகவரி, மற்றும் மேல் மட்ட அதிகாரிகள் என தெரிந்து கொள்ள தற்போது வரை, 3 ஆயிரம் நோட்டீஸ்களை வழங்கியுள்ளோம்.
ஆகவே சாலை விபத்துகளை கட்டுப்படுத்த சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். அப்படி விதிகளை பின்பற்றினால் விரைவில் விபத்தில்லா கோவையை உருவாக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆய்வாளர் சதாசிவம், உதவி ஆய்வாளர் முருகன் உள்ளிட்ட போக்குவரத்து போலிசார் பலர் கலந்து கொண்டனர்.