கோவை மக்களின் பாரம்பரியம், கலாச்சாரத்தைப் போற்றும் பத்தாவது "கோவை விழா" கொண்டாட்டம் இன்று கோலாகலமாக துவங்குகிறது.
கோவை, ஜனவரி 3
கோவை மக்களின் பாரம்பரியம், கலாச்சாரத்தைப் போற்றும் பத்தாவது "கோவை விழா" கொண்டாட்டம் இன்று கோலாகலமாக துவங்குகிறது.

கோவையின் பெருமையை போற்றும் வகையில் வரும் 12-ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறவுள்ள இந்த திருவிழாவில் கலை, விளையாட்டு, இசை, இலக்கியம், உணவு முறை, தொழில்நுட்பம், மருத்துவம் என பல்வேறு துறைகளின் சார்பில் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், இந்த ஆண்டு முதல் முறையாக "டபுள் டக்கர்" பேருந்து, கோவை விழாவின் ஒரு பகுதியாக அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கான துவக்க விழா வ.உ.சி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில், கோவை மாநகர காவல்துறை ஆணையர் பெரியய்யா கலந்து டபுள் டக்கர் பேருந்தை கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இந்த பேருந்தில் இன்று துவங்கி வரும் 12-ம் தேதி வரை ஜாலியாக கோவையின் முக்கிய பகுதிகளை சுற்றிப் பார்க்கலாம். மேலும், இலவசமாக முன் பதிவின் அடிப்படையில் டோக்கன் பெற்று ஒரு மணி நேரம் இந்த பேருந்தில் பயணம் செய்யலாம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, இவ்விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் ‘யங் இன்டியன்ஸ்’ அமைப்பின் தலைவர் திரு. பிரசன்னா கிருஷ்ணன் பேசுகையில், ‘கோயம்புத்தூர் விழாவின் பத்தாவது பதிப்பில் சென்ற ஆண்டை விட அதிக எண்ணிக்கையில் கோவை மக்கள் பங்கேற்பார்கள். இரண்டடுக்கு பேருந்தில் பயணம் செய்து கோவையின் முக்கியமான பகுதிகளை பொதுமக்கள் இலவசமாகச் சுற்றிப்பார்த்து மகிழலாம்' என்றார்.

கடந்த 9 ஆண்டுகளாக கோவை மக்களால் கொண்டாடப்படும் கோவை விழா நிகழ்ச்சியை, இந்திய தொழிற்கூட்டமைப்பின் ஓர் அங்கமான யங் இன்டியன்ஸ் அமைப்பின் கோவை கிளை பல தனியார் அமைப்புகளோடு இணைந்து நடத்திவருகின்றது.
இந்நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சி ஆணையர் டாக்டர் திரு. கே. விஜய கார்த்திகேயன், போக்குவரத்து துணை ஆணையர் திரு. சுஜித் குமார், சிறுதுளி அமைப்பின் அறங்காவலர் வனிதா மோகன் மற்றும் இந்திய தொழிற்கூட்டமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கோவை விழாவின் ஒரு பகுதியாக, கோவையின் பாரம்பரிய உணவு வகைகளின் சிறப்பை உணர்த்தும் வகையில் பல்வேறு உணவுத் திருவிழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. "டேஸ்ட் ஆப் கோவை" என்ற பெயரில் மாபெரும் உணவுத்திருவிழா வ.உ.சி மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொடர்ப்புக்கு: +91 6380337673