கோவை, டிசம்பர் 26
மருத்துவ ஊழியர்களை அச்சுறுத்தும் மர்ம நபர்களை அடையாளம் காண அரசு மருத்துவமனையில் 74 கண்காணிப்பு காமிராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர். B அசோகன் தெரிவித்துள்ளார்.
கோவை அரசு மருத்துவமனைக்கு நாள் தோறும் 8 ஆயிரம் வெளி நோயாளிகளும் 1500க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் வந்து செல்கின்றனர்.
நோயின் தீவிரத்தன்மை காரணமாக நோயாளிகள் உயிரிழக்கும் போது அவர்களின் உறவினர்கள் மருத்துவ பணியாளர்கள் மீது கோபம் கொண்டு அவர்களை தாக்க முற்படுகின்றனர்.
மேலும், சில மர்ம நபர்கள் இரவு நேரங்களில் மருத்துவமனை வார்டுகளுக்குள் புகுந்து அங்கு உள்ள மருத்துவ பணியாளர்களை மிரட்டி வருகின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தன்னை அரசியல் கட்சி ஒன்றின் பிரமுகர் என்று கூறிக் கொண்டு மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்த நபர் ஒருவர் இருப்பிட மருத்துவ அதிகாரியையும், மருத்துவமனை ஊழியர்களையும் தாக்க முற்பட்டார்.
இது தொடர்பாக, மருத்துவமனை தரப்பு அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் அந்த நபரை எச்சரித்து அனுப்பினர்.
இவ்வாறு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் எழுவதால் , மருத்துவமனை ஊழியர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக சிம்ப்ளி-சிட்டி செய்திகளை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், மருத்துவ பணியாளர்களை அச்சுறுத்தும் நபர்களை அடையாளம் காண கண்காணிப்பு காமிராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதாக அம்மருத்துவமனையின் முதல்வர்தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் 74 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மருத்துவமனை வளாகத்திற்கு வந்து செல்பவர்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பதற்காக அவை பொருத்தப்பட்டன.
தற்போது நிர்வாக பொறுப்பில் உள்ள அதிகாரிகளின் அறையிலும் கண்காணிப்பு காமிராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் அதிகாரிகளை மிரட்டும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது போலீசாரிடம் புகார் அளிக்க முடியும்" என்றார்.