கோவை, டிசம்பர் 1
கோவை மாநகரில் உள்ள அனைத்து கட் அவுட்கள் மற்றும் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் மரு க. விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
கோவை வ.உ.சி மைதானத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வரும் டிசம்பர் மூன்றாம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு மாநகரம் முழுவதும் கட் அவுட்டுகள் மற்றும் பேனர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த நவம்பர் 25-ம் தேதி நூற்றாண்டு விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவில் மோதி ரகுபதி (32) என்ற இளைஞர் உயிரிழந்தார் என்று புகார்கள் எழுந்தன.
இதனைத்தொடர்ந்து, சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. ந.கார்த்திக் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கோவையில் சட்ட விதிமுறைகளை மீறியும், பொதுமக்களுக்கு இடையூறாகவும் அமைக்கப்பட்டுள்ள கட் அவுட்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.
இதனையடுத்து, கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் உடனடியாக நகரத்தில் உள்ள விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள கட்அவுட்களை அகற்ற உத்தரவிட்டுள்ளார்.
வரும் டிசம்பர் 3-ம் தேதியன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவையில் பரவலாக கட் அவுட் மற்றும் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது விடுக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு அதிமுக-வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, கோவை மாநகராட்சி நிர்வாகம் இந்த முடிவினை முன்கூட்டியே எடுத்திருந்தால் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அலங்கார வளைவில் மோதி ஒரு இளைஞர் உயிரிழந்திருக்க மாட்டார் என்று தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் எஸ்.பி. தியாகராஜன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், நகரம் முழுவதும் அரசியல் கட்சியினர் மற்றும் விளம்பரதாரர்களால் அமைக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் கட் அவுட்களை எவ்வித தயக்கமும் இன்றி அதிகாரிகள் அகற்ற வேண்டும். இதன் மூலமே பிற்காலத்தில் விபத்துக்களை தவிர்க்க முடியும் என்றார்.