கோவை நகரத்தை ஸ்மார்ட் சிட்டி நகரமாக்க கோவை மாநகராட்சி சார்பில் பல்வேறு திட்டங்கள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன, மேலும் புதிய திட்டங்கள் கோவையில் அறிமுகப்படுத்துவது குறித்து வாரந்தோறும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் மாநகராட்சி கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். தற்போது, நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கோவை காந்திபுரத்தில் மூன்று நடை மேம்பாலங்களை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
தற்போது, கோவைக்கு 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் நிதி கிடைத்திருப்பதால் அதிலேயே பல பணிகளைச் செய்வதற்கு மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக காந்திபுரத்தில் கிராஸ்கட் ரோடு, சென்ட்ரல் மற்றும் திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் இருந்து டவுன் பஸ் ஸ்டாண்டுக்கு வந்திறங்கும் வகையில் மூன்று இடங்களில் இரும்பு நடை மேம்பாலம் அமைப்பதற்கும் முடிவு செய்துள்ளது. இதற்காக, ஒரு நாளில் சாலையை எவ்வளவு பேர் கடக்கின்றனர், எந்தெந்த அளவுகளில் நடை மேம்பாலம் அமைக்கலாம் என ஆலோசனை நிறுவனத்தினர் ஆய்வு செய்து வடிவமைப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாநகரில் பொதுமக்கள் அதிகம் சாலை கடந்து செல்லும் பல இடங்களில், சுரங்கப்பாதை அல்லது நடை மேம்பாலம் அமைக்க வேண்டுமென்பது நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது. நிதி இல்லை என்பதே, இதற்கு காரணமாக கூறப்பட்டு வந்தது. காந்திபுரம் மேம்பாலம் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டபோது, இதே மூன்று இடங்களில் சுரங்கப்பாதைகளுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், பாலத்தின் வடிவம் மாற்றப்பட்டு, சுரங்கப்பாதை அமைக்கும் திட்டமும் கைவிடப்பட்டுவிட்டது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறிகையில்; காந்திபுரத்தில் உயர்மட்ட பாலத்துடன், மூன்று இடங்களில் சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சாலைக்கு கீழ் பாதாள சாக்கடை குழாய், குடிநீர் பகிர்மான பிரதான குழாய், மின்புதை வடம் மற்றும் தொலைதொடர்புத்துறை ஒயர்கள் பதிக்கப்பட்டு உள்ளதால், சுரங்க நடைபாதை கட்டுவது சிரமம் என்று அம்முயற்சி கைவிடப்பட்டது. அதற்கு மாற்றாக, இரும்பு நடை மேம்பாலம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது. வடிவமைப்பு தயாரானதும், செயல்பாட்டுக்கு உகந்ததாக இருக்குமா என உயரதிகாரிகள் குழுவினர் கள ஆய்வு செய்து அனுமதி தருவர். அதன்பின், திட்ட அறிக்கை தயாரித்து நகராட்சிகளின் நிர்வாக ஆணையத்திடம் அனுமதி பெற்று டெண்டர் கோரப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.