கோவையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தி செல்வதால் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், அத்தகைய இடங்களை கண்டறிந்து போக்குவரத்து போலீசார் சார்பில் 'நோ பார்க்கிங்' பலகை வைக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பை மீறி அந்த இடங்களில் வாகனங்களை நிறுத்திச் செல்வோரிடம் போலீசார் அபராதம் விதித்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

இந்தநிலையில், 'நோ பார்க்கிங்' அறிவிப்பு பலகை வைக்கப்பட்ட இடத்தில் நின்ற போலீசாரின் வாகனத்திற்கு போக்குவரத்து காவல்துறையினர் பூட்டு போட்ட சம்பவம் கோவையில் நடந்துள்ளது.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்புறம் கோவை மாநகர போக்குவரத்து போலீசார் 'நோ பார்க்கிங்' பலகை வைத்துள்ளனர். ஆனால், இன்று அப்பகுதிக்கு வந்த காவல்துறை வாகனம் ஒன்று அறிவிப்பு பலகைக்கு முன்புறமே வாகனங்களை நிறுத்திச் சென்றனர். அப்போது அங்கு வந்த போக்குவரத்து போலீசார் 'நோ பார்க்கிங்'-கில் நின்ற கார்களின் சக்கரங்களுக்கு பூட்டு போட்டனர். தொடர்ந்து, அருகில் நின்ற போலீசாரின் வாகனத்தின் சக்கரங்களுக்கும் பூட்டு போட்டுச்சென்றனர். ஆனால், பூட்டிய சில நிமிடங்களிலேயே அந்த பூட்டு அகற்றப்பட்டது.

'நோ பார்க்கிங்'-யில் நின்ற வாகனம் புலனாய்வு பிரிவு போலீசாருக்கு சொந்தமான வாகனம் என்று கூறப்படுகிறது.