கோவை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் தற்போது பருவமழைக் காலம் துவங்கப்படவுள்ளது. இந்த காலகட்டத்தில் குழந்தைகளுக்கு காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலக் குறைபாடு ஏற்படாமல் தடுக்க நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், நீர்ச்சத்து நிறைந்த ஆகாராம் அதிகளவில் கொடுக்க வேண்டும், குழந்தைகள் அதிகப்படியாக விளையாடி சோர்வடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என கோவை அரசு பொது மருத்துவமனை இருப்பிட மருத்துவர் சவுந்திரவேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அரசு பொது மருத்துவமனை இருப்பிட மருத்துவர் சவுந்திரவேல் நமது சிம்ப்ளி சிட்டி-க்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:-
கோவை அரசு பொது மருத்துவமனையில் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பின் காரணமாக கோவை, உதகை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 7 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த காலகட்டம் டெங்கு நோய் பரவுக் கூடிய காலகட்டம் அல்ல. கேரளாவில் தற்போது இந்த வகையான காய்ச்சல் பரவிவருகிறது. அங்கு சென்று வந்த ஒருவரிடம் இருந்துதான் இந்த காய்ச்சல் கோவை உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு பரவிவருகிறது.
டெங்கு காய்ச்சலை தடுக்கும் முறை நம்மிடமே உள்ளது. பொது இடங்களில், வீட்டின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள பொருட்களை அகற்ற வேண்டும். தேங்காய் தொட்டி, பொது குடிநீர் விநியோகத் தொட்டி, பயன்பாடு அற்ற பழைய டயர்கள் உள்ளிட்டவற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
வீட்டில் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டியின் அடிப்பகுதியில் தண்ணீர் தேங்கும் ஒரு பகுதி இருக்கும். அதனை வாரம் ஒரு முறை என சுத்தம் செய்ய வேண்டும். அதனை பெரும்பாலான மக்கள் கண்டுகொள்வதில்லை. இதனால், அந்தப் பகுதியில் கொசு லார்வா (டெங்கு கொசுப்புழுக்கள்) உருவாகின்றன.
இந்த டெங்கு மூன்று வகைப்படும். ஒன்று சாதாரண காய்ச்சல். இதில் பாதிக்கப்படும் 90 சதவிகித மக்களை எளிதில் குணப்படுத்தி விடலாம். மீதமுள்ள இரு வகை காய்ச்சல் மிகவும் சிரமம் அளிக்கக் கூடியது. உடல்நிலையில் சோர்வு, காய்ச்சல் உள்ளிட்ட ஏதேனும் பாதிப்புகள் இருப்பின் மக்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள். கோவை அரசு பொது மருத்துவமனையில் இதற்கான சிகிச்சைக்கு அனைத்து வசதிகளும் உள்ளன.
பருவ மழை துவங்கவுள்ள காலகட்டத்தில் குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீர்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை அதிகளவில் கொடுக்க வேண்டும். குழந்தைகள் அதிகப்படியாக விளையாடி சோர்வடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்".
இவ்வாறு கோவை அரசு பொது மருத்துவமனை இருப்பிட மருத்துவர் சவுந்திரவேல் தெரிவித்தார்.