மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை விதித்த மத்திய அரசை கண்டித்து, கோவை ஆத்துப்பாலம் பகுதியில் கொங்கு மண்டல மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை விதித்த மத்திய அரசை கண்டித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை ஆத்துப்பாலம் பகுதியில் கொங்கு மண்டல மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், சமத்துவ கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், மாடுகளை இறைச்சிக்காக விற்பனை தடைசட்டத்தினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டார். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாடுகளை வாங்கி வந்த தமிழக கால்நடை அதிகாரிகள் பசு பாதுகாவலர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழக அரசு ஒரு கண்டன அறிக்கை கூட விடமால் மெளனம் காப்பதாகவும், மத்திய அரசிடம் அடிமையாக தமிழக அரசு மாறி விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மாடுகளை விற்பனை செய்ய விதித்த தடையை நீக்கவில்லை எனில், அனைத்து தரப்பு மக்களும் போராட்டங்களில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.