மாநகராட்சி சார்பில் ஒரே நாளில் வரைபடம் அனுமதி வழங்க 'எஸ்பிரஸ் அப்ரூவல்' என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோவையில் வீடு அல்லது ஏதேனும் கட்டுமான கட்ட வேண்டுமெனில், வரைபட அனுமதி பெற மாநகராட்சி நகரமைப்பு பிரிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். 4 ஆயிரத்திற்கும் அதிகமான அளவீடு என்றால் உள்ளூர் திட்டக்குழுமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலமாகவும் கட்டிட வரைபட அனுமதி வழங்கும் திட்டமும் கொண்டுவரப்பட்டது. எனினும் கோப்பு வடிவிலும் ஆவணங்கள் சமர்பிக்க வேண்டியுள்ளது. இதன் மூலம் விண்ணப்பங்கள் தேங்கி, இருமாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்படுகிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 1,200 சதுர அடிக்கு கட்டிடம் கட்டுவதற்கு ஒரே நாளில் வரைபடம் அனுமதி வழங்க 'எஸ்பிரஸ் அப்ரூவல்' என்ற புதிய திட்டத்தை மாநகராட்சி சார்பில் விரைவில் அறிமுகபடுத்த திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி பிரதான அரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டம் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை ஆணையர் காந்திமதி, நகரமைப்பு அலுவலர் சசிபிரியா, உதவி நகரமைப்பு அலுவலர்கள் மற்றும் உரிமம் பெற்ற கட்டிட வரையாளர்கள் பங்கேற்றனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்; அங்கீகரிக்கப்பட்ட இடத்தில 1,200 சதுர அடிக்கு கட்டிடம் கட்டுவோர், உரிமம் பெற்ற கட்டிட வரையாளர்கள் மூலமாக தேவையான ஆவணங்களுடன் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். பின் கோப்பு வடிவில் ஆவணங்களை நகரமைப்பு அலுவலர்களிடம் சமர்பிக்க வேண்டும். கட்டிட அனுமதி கட்டணத்தை வங்கியில் செலுத்தி சலான் சமர்ப்பிக்கும் நாளன்று, ஒரே நாளில் அனுமதி அப்ரூவல் வழங்கப்படும். வாரத்தில் இருநாட்கள் புதன் மற்றும் வியாழன் அன்று மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12 மணிவரை சமர்ப்பிக்க வேண்டும். மதியம் 2 மணிமுதல் மாலை 5 மணிவரை உதவி நகரமைப்பு அலுவலர் அறிக்கையை சமர்பிப்பார். நகரமைப்பு அலுவலர் பரிந்துரைக்குப் பின் உத்தரவு வழங்கப்படும்" என தெரிவித்தனர்.