நோன்பு இருப்பது அனைத்து மதங்களுக்கும் பொதுவானது. இந்து மதத்தில் விரதம் எனபடும் இந்த நோன்பு மாதம் ஒருமுறை தொடங்கி, மாதம், வாரம் மற்றும் மண்டலத்திற்கு ஒரு முறை என நீள்கிறது. கிறித்தவ மதத்திலும் லெண்ட் நோன்பு உள்ளது. அதுபோலவே இஸ்லாமியர்களும் ரமலான் மாதத்தில் நோன்பு இருந்து உடல், மனம், ஆன்மாவை சுத்திகரித்துக் கொள்கிறார்கள்.

இயற்கை மருத்துவம்:
இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான ஐம்பெருங்கடமைகளாக கலிமா, தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் போன்றவைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
இந்த கொள்கைகள் மனிதகுலத்தின் ஒருமைப்பாடு, சமத்துவம், சகோதரத்துவம், உலக அமைதி, பொருளாதாரப் பங்கீடு ஆகியவற்றின் திறவுகோலாக உள்ளன.
உணவு, தண்ணீர், உடல் இச்சை ஆகியவற்றை தவிர்த்திருப்பது மட்டும் நோன்பின் நோக்கமல்ல. ஒருவர் நோன்பிலிருக்கும் போது பொய், புறம் பேசுவது, தீய பார்வை, தீயன கேட்டல், தீய உணர்வுகள் ஆகியவற்றை விலக்கி வைப்பதும் கட்டாயமாகும்.
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் அரை நாளுக்கும் கூடுதலாக நோன்பிருக்கிறார்கள். வருடத்தின் 11 மாதங்களில் உடலில் தேங்கிய கொழுப்பை மறுசுழற்சி செய்ய நோன்பு மருத்துவரீதியில் உதவுகிறது. நோன்பு இருப்பவர்கள் பசித்திருக்கும்போது உடலில் தேங்கிய சர்க்கரைளவு பகலில் உடலை இயங்க வைப்பதற்காக அதிகமாகச் செலவிடப்படுகிறது. ஒரு மாத நோன்பு உடற்கழிவுகளை நீக்கி இரைப்பை, குடல் முதலியனவற்றைப் புதுப்பிக்கிறது. அவற்றின் பணிகள் சிறக்க உதவுகின்றன.
உடல் பருமன் குறைவதற்கு வழியேற்பட்டு இரத்தக்கொதிப்பு, இதய நோய்கள் போன்றவை தாக்காமல் உடல் காக்கப்படுகிறது.
காலை 3 முதல் 5 மணி வரை உள்ள 2 மணி இடைவேளை நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் நேரமாக உள்ளது. நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் இந்த நேரத்தில் (அதிகாலையில் நோன்பு வைப்பதற்காக) நோன்பு இருக்கும் ஒருவர் அதிக நேரம் விழித்திருப்பதால் அவரின் நுரையீரல் மிகுந்த புத்துணர்வு பெற்று சிறப்பாக செயல்படுகின்றது. இதன் மூலம் மற்ற உறுப்புக்கள் புத்துணர்வு பெறுகின்றன.
நுரையீரல் அதிகமாக இயங்கும் நேரத்தை 'அமுத காற்று வீசும் நேரம்' என்று யோகா கலையில் கூறப்படுகிறது.
காலை மதியம் இரவு வழக்கமாக சாப்பிட்டுப் பழகிப் போன நமது வயிறு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்றவை 1 மாத காலம் இந்த நேரம் மாறி ஸஹர் நேரத்தில் நாம் சாப்பிடுவதன் மூலம் இந்த உறுப்புக்களின் வழக்கமான இயக்க முறையில் ஓய்வு கிடைத்து வழக்கத்திற்கு மாறாக, அதிகாலை நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் அவை புத்துணர்ச்சி பெற்று இயங்க ஆரம்பிக்கின்றன. இதன் மூலம் இந்த உறுப்புகளின் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடைகின்றன.
நோன்பு கஞ்சியின் சிறப்புகள்

புனித ரமலான் மாதத்தில் அனைத்து மதத்தினரும் விரும்பி உண்ணக் கூடியது நோன்புக் கஞ்சி. நாள் முழுவதும் நோன்பு இருந்து வாடிப் போய் இருப்பவர்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பது இந்த கஞ்சி.
அசர் என்னும் மாலை நேரத் தொழுகைக்கு பின்னர் அனைத்து பள்ளிவாசல்களிலும் நோன்பு கஞ்சி வழங்கப்படும். இவ்வாறு ரமலான் மாதம் முழுவதும் பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி வழங்கப்படுவது வழக்கம்.

மாலையில் இஃப்தார் எனப்படும் நோன்பு திறக்கும் நேரத்தில் உடலின் நீர்ச்சத்து குறைந்து நாவரட்சி ஏற்பட்டு, உடலின் சர்க்கரை பகல் முழுதும் பயன்படுத்தப்பட்டதால் சிலருக்கு சோர்வு மற்றும் தலைவலி ஏற்படக்கூடும். இந்நிலையில் சோர்வுற்ற உடலுக்குத் தேவையான உடனடி புத்துணர்வை வழங்க அருமையான ஆகாரமாக நோன்புக்கஞ்சி இருக்கிறது.
எனவே, ரமலான் மாத நோன்பின் போது நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு பள்ளிவாசல்களுக்கு 4,900 மெட்ரிக் டன் அரிசி வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பள்ளிவாசல்களுக்கு தேவையான அரிசிக்கான மொத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 3000-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு அரிசி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.