அரசுத்துறை என்றாலே லஞ்சமும், ஊழலும் என்றாகிவிட்ட காலத்தில் லஞ்சம் கொடுப்பதை மக்கள் தங்கள் கடமையாக கருத துவங்கிவிட்டனர். இதன் தொடர்ச்சியாக தங்கள் கடமையை முடித்துக் கொடுக்க வேண்டிய அதிகாரிகள் நெஞ்சை நிமிர்த்தி லஞ்சம் பெற்று வருகின்றனர். லஞ்சம் பெற்று சிக்கிக்கொள்ளும் அதிகாரிகள் அவ்வப்போது கைதாகும் செய்தி அறிந்தாலும், இன்னும் பலர் ‘கை நீட்டும்; வழக்கத்தை கை விடுவதாய் இல்லை.
தனக்கு லாபகரமான செயல் ஒன்றை நிறைவேற்றி கொடுக்க லஞ்சம் கொடுக்கப்படுகிறது; பெறப்படுகிறது. ஆனால், சக மனிதன் துயர சம்பவத்தில் சிக்கித்தவிக்கும் போதும் அவனிடம் லஞ்சம் கேட்டு அரித்தெடுக்கும் சம்பவங்கள் அரசு மருத்துவமனைகளில் தான் நடைபெறுகின்றன.
கோவை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் மனிதத்தை மறந்த சில மனிதர்கள், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சடலத்தை உறவினர்களிடம் கொடுக்க லஞ்சம் கேட்டு பெறும் துயரங்கள் இன்னும் தொடர்கிறது.
கோவை அரசு மருத்துவமனைக்கு நாள் ஒன்றிற்கு கோவை, பெள்ளாச்சி, நீலகிரி, திருப்பூர், பாலக்காடு போன்ற பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இது மட்டுமின்றி, விபத்து, கொலை போன்ற சம்பவங்களால் உயிரிழந்தோரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்படுவதற்காக இம்மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுகிறது.
இக்கட்டான சூழலில் இந்த மருத்துவமனைக்குள் நுழைந்தால் ‘கப்-சிப்’ என்று மூக்கை பிடித்து கொண்டு சென்ற காலம் மாறி தற்போது மருத்துவமனையின் தரம் உயர்த்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதை அரசு மருத்துவமனை பணியாளர்கள் தனியார் மயமாக்கல் என்று நினைத்து விட்டது போல, சிகிச்சைக்காக அல்லது இறந்தவரின் சடலத்தை பெற வருவோர்களிடம் லஞ்சத்தை கட்டணம் போல கேட்கத் துவங்கியுள்ளனர்.
தவறான சிகிச்சை
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் சக்தி (47) இவரது மகள் பாக்யஸ்ரீ (17). அப்பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர் உடல் எடை அதிகமாக இருந்ததால் நவீன் பாலாஜி என்பவருக்கு சொந்தமான ஆயூர்வேத மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் சில காரணங்களுக்காக பாக்யஸ்ரீ அருகில் இருந்த மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாக்யஸ்ரீ பரிதாபமாக உயரிழந்தார். அவரது உடல் இன்று கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்டது.
மனித தவறுகளால் தனது ஒரே செல்ல மகளை பறிகொடுத்த துக்கத்தில் அந்த தந்தை அழுது புலம்பினார். பிரேத பரிசோதனை செய்து முடிக்க நேரம் பிடிக்க ஆறுதல் சொல்ல அருகில் உறவினர்களும் இன்றி சக்தி மிகுந்த துயரில் ஆழ்ந்திருந்தார்.
பிணத்திற்கு பணம்
அப்போது, ‘சடலத்தை எடுத்து செல்லலாம்’ என்ற குரல் கேட்க மகளின் முகத்தை பார்த்து கதறி அழ ஓடிச்சென்ற சக்தியிடம் பிரேத பரிசோதனை கூடத்தில் இருந்த பணியாளர்கள், ‘பணத்தை கொடு, பிணத்தை எடு’ என்ற தோணியில் நிபந்தனை வைக்க மனமுடைந்து போனார் சக்தி.
எதற்காக பணம்? என்று சக்தி கேள்வி கேட்க, ‘2 ஆயிரம் பணத்தை கொடுத்தால் தான் சடலத்தை தருவோம்’ என்று கூறியதோடு, பிரேத பரிசோதனை கூடத்தில் வெளியே கொண்டுவந்த பாக்யஸ்ரீ-யின் சடலத்தை மீண்டும் உள்ளே கொண்டு சென்றனர். மகளை பறிகொடுத்த துக்கம் தொண்டையை அடைக்க, அங்கிருந்து வெளியே வந்த சக்தி மருத்துவமனை வளாகத்தில் இருந்த பத்திரிக்கையாளர்கள் சிலரிடம் தனது சொல்லிலடங்கா துயரத்தை சொல்லி முறையிட்டார்.
நீண்ட போராட்டங்களுக்கு பின்னர் பாக்யஸ்ரீ-யின் உடல் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை கூடத்திலிருந்து அந்த பெண்ணின் சடலத்தை அமரர் ஊர்தியில் ஏற்ற கூட மருத்துவமனை பணியாளர்கள் முன்வரவில்லை. அருகிலிருந்தோர் உதவியுடன் ‘ஸ்ட்ரெச்சரை தூக்கி அமரர் ஊர்திக்கு வந்தார்.

அங்கு அவருக்கு மீண்டும் ஓர் அதிர்ச்சி, பொதுவாக சடலங்களை எடுத்து செல்லும் அமரர் ஊர்தியில் குளிர்சாதன பெட்டி ஒன்று இருக்கும். பாக்யஸ்ரீ-யின் சடலத்தை ஏற்றிய அமரர் ஊர்தியில் அந்த பெட்டியும் வேலை செய்யவில்லை. அதனால், பாதுகாப்பற்ற முறையில் தனது மகளின் சடலத்தை அருகில் வைத்துக்கொண்டு மருத்துவமனை அதிரும் ஓலக்குரலோடு சேலம் புறப்பட்டார் சக்தி.
சக மனிதன் துயருற்றிருக்கும் போதும், பணத்தின் மீதான பற்றால் மனிதத்தன்மை இழந்திருக்கும் பணியாளர்களால் பாவப்பட்டு வருகிறது கோவை அரசு மருத்துவமனை.
இந்த தந்தையை போல எத்தனையோ தந்தைகளும், கணவன்களும், அண்ணன்களும், பெண்களும் இத்துயருக்கு ஆளாகிவருவது வரலாற்றை கறைபடியச் செய்து கொண்டிருக்கிறது. காணொளி பார்க்க