கோவை ராஜாவீதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பள்ளி மாணவர்கள் சீருடை மற்றும் புத்தகப்பைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை ராஜாவீதி பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்றக்கோரி, அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி சீருடை மற்றும் புத்தகப்பைகளுடன் வந்த மாணவ, மாணவிகள் டாஸ்மாக் கடை முன்பாக இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர். பள்ளிகள் மற்றும் வழிபாட்டு தளங்களுக்கு அருகே செயல்படும் மதுபானக்கடையினால் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படுவதாகவும், பள்ளி திறக்கும் முன்பாக அப்பகுதியில் உள்ள மதுபானக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள் தெரிவித்தனர்.
பள்ளிகளுக்கு அருகேயுள்ள மதுபானக் கடையினால் மாணவர்களுக்கு குடிபழக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், மதுகுடிப்பவர்களினால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து டாஸ்மாக் கடையினை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.