கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந்தவருக்கு ரூ.80 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. மொத்த தீர்வு தொகை ரூ.55.62 கோடி ஆகும்.


Coimbatore: தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மற்றும் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் J.ஸ்ரீதேவி தலைமையில் இந்நிகழ்வு செப்டம்பர் 12, 2026 அன்று காலை 10 மணிக்கு கோவை நீதிமன்றங்களிலும், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், மதுக்கரை ஆகிய இடங்களிலும் நடைபெற்றது.


இம்மக்கள் நீதிமன்ற துவக்க விழாவில், கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் (பொறுப்பு) மற்றும் முதலாவது கூடுதல் சார்பு நீதிபதி K.செந்தில்குமார் வரவேற்புரை ஆற்றினார். கோவை மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் R.பாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். கோவை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் K.சிவக்குமார் சமரச தீர்வு குறித்து சிறப்புரை ஆற்றினார்.


தலைமையுரையாற்றிய முதன்மை மாவட்ட நீதிபதி J.ஸ்ரீதேவி, தேசிய மக்கள் நீதிமன்றத்தின் பயன்கள் குறித்து விரிவாக விளக்கினார். இந்நிகழ்வில் மிக முக்கியமான தருணமாக, கடந்த செப்டம்பர் 22, 2025 அன்று மலுமிச்சம்பட்டி அருகே ஏற்பட்ட வாகன விபத்தில் இடது காலை இழந்த கோகுல கிருஷ்ணனுக்கு ரூ.80 லட்சம் இழப்பீடு காசோலையாக வழங்கப்பட்டது.


இம்மக்கள் நீதிமன்றத்தில் பல்வேறு வகையான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. சமரசம் செய்யக்கூடிய சிறுகுற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், நிலம் மற்றும் சொத்து பாகப்பிரிவினை வழக்குகள், வாடகை விவகாரங்கள், தொழிலாளர் சம்மந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன்கள், கல்விக்கடன்கள் தொடர்பான வழக்குகள், விவாகரத்து தவிர மற்ற குடும்ப பிரச்சனை வழக்குகள், நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லாத Pre-Litigation வழக்குகள், கடன் மீட்பு தீர்பாய வழக்குகள் ஆகியவை அடங்கும்.


மொத்தம் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் மொத்த தீர்வு தொகை ரூ.55 கோடியே 62 இலட்சத்து 57 ஆயிரத்து 680 ஆகும். குறிப்பிடத்தக்க விஷயமாக, 5 ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த 49 வழக்குகளுக்கு இம்மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டது.


இந்நிகழ்வில் கோவை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவர் (பொறுப்பு) மற்றும் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான முதலாவது சிறப்பு நீதிமன்ற மாவட்ட நீதிபதி G.நாராயணன் உள்ளிட்ட மூத்த மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், மாவட்ட உரிமையியல் நீதிபதிகள், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் பங்கேற்றனர்.


மாவட்ட தலைநகரில் 23 அமர்வுகள், கோவை கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் 2 அமர்வுகள், தாலுக்கா அளவில் பல்வேறு அமர்வுகள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 27 அமர்வுகள் மூலம் இம்மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கான ஏற்பாட்டினை செயலாளர் (பொறுப்பு) K.செந்தில்குமார் சிறப்பாக செய்திருந்தார்.


தேசிய மக்கள் நீதிமன்றம் சிறப்பாக நடைபெற உதவிய கோவை மாவட்ட வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், மாவட்ட நிர்வாகத்தினர், காவல் துறையினர், வங்கி மற்றும் காப்பீடு நிறுவனத்தினர், ஊடகவியலாளர்கள், பத்திரிகை நண்பர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் கோவை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...

Coimbatore Police Introduce Family Liaison Officers to Assist Crime Victims

Coimbatore City Police have introduced the Family Liaison Police Officer (FLPO) system to ensure continuous communicatio...

Dengue Cases Declining in Coimbatore, Prevention Measures Intensified: Minister Arunraj

Health Minister K.G. Arunraj said dengue cases in Coimbatore have declined compared to last year, with preventive measur...