கோவையை அடுத்த கணியூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்றுகொண்டிருந்த கார் மீது, வேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
சேலம் - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கார் திருப்பூரில் இருந்து கோவையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த கார் கோவையை அடுத்த கணியூர் பகுதியில் வந்துகொண்டிருந்த போது, திடீரென டயர் வெடித்து பழுதாகி சாலையில் நின்றது. இதனை பார்த்த இரு சக்கர வாகன ஓட்டிகள் காரில் இருந்தவர்களை மீட்க உதவிக்கொண்டிருந்தனர்.
இதனிடையே, திருப்பூரில் இருந்து கோவையை நோக்கி மற்றொரு கார் வேகமாக வந்துகொண்டிருந்துள்ளது. அப்போது, பழுதாகி நின்றுகொண்டிருந்த காரிரை பார்த்த கார் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்த முற்பட்டுள்ளார். ஆனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பழுதாகி நின்றுகொண்டிருந்த காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இரண்டு கார்களில் இருந்தவர்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர். அதில் 2 பேர் கவலைக்கிடமான நிலையில், அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. இந்த விபத்து குறித்தும், பலியானவர்கள் விபரங்கள் உள்ளிட்டவை குறித்தும் கருமத்தம்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.