ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த துணி தேய்க்கும் தொழிலாளி ரஞ்சித்குமார் ராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டார். CCTV காட்சிகள் மூலம் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டார்.


Coimbatore: கோவை மாநகரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாக வசித்த மூதாட்டியைக் கொலை செய்து நகைகள் கொள்ளையடித்த சம்பவத்தில் துணி தேய்க்கும் தொழிலாளி ஒருவர் ராமேசுவரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விரைவாக குற்றவாளியைக் கண்டுபிடித்து போலீஸார் கைது செய்துள்ளனர்.




கோவை மாநகர் ராமநாதபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாக வசித்து வந்தவர் தங்கராஜ் மனைவி கோமதி (69). கடந்த மே 2ஆம் தேதி இவர் தனது வீட்டிலேயே கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. லண்டனில் வசித்து வந்த அவரது மகள் ராதிகா மே 3ஆம் தேதி வீடு திரும்பியபோது தாயார் கொலை செய்யப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.




இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். குற்றவாளியைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.




போலீஸார் நடத்திய விரிவான விசாரணையில், கோமதியின் வீட்டுக்கு துணி தேய்க்கும் பணிக்காக வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (24) என்பவரே கொலை செய்தது தெரியவந்தது. அவரைத் தேடி போலீஸார் விரைந்தனர். இந்நிலையில், மனைவியுடன் ராமேசுவரத்துக்கு சுற்றுலா சென்றிருந்த ரஞ்சித்குமாரை போலீஸார் அங்கு வைத்து மே 5ஆம் தேதி கைது செய்தனர்.




துணி தேய்க்கும் தொழிலாளியே கொலைகாரன்



இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: கோமதி உள்ளிட்ட அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் சிலரின் துணிகளை ரஞ்சித்குமார் தான் தேய்த்து கொடுத்து வந்துள்ளார். இதன்மூலம் கோமதி தனியாக வசிப்பது அவருக்குத் தெரியவந்தது. துணி வாங்குவதற்காக கடந்த சனிக்கிழமை (மே 2) ரஞ்சித்குமார் அங்கு சென்றபோது வெளியில் யாரும் இல்லாததைப் பயன்படுத்தி வீட்டுக்குள் சென்று கோமதியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.




பின்னர், அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, கம்மல், வளையல் மற்றும் கைப்பேசி ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார். அந்த நகைகளை ரூ.2 லட்சத்துக்கு விற்றுவிட்டு மனைவியுடன் ராமேசுவரத்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு சென்று அவரைக் கைது செய்து விசாரித்தபோது தனக்குக் கடன் இருப்பதாகவும், அதை அடைப்பதற்காக கோமதியைக் கொன்று நகைகளைக் கொள்ளையடித்ததாகவும் ஒப்புக்கொண்டார்.




இதைத்தொடர்ந்து அவரைக் கோவைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைத்தோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.




இந்தச் சம்பவம் அடுக்குமாடி குடியிருப்புகளில் தனியாக வசிப்பவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...