கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை உயர வாய்ப்பு: அக்டோபரில் தினமும் 10,000 பயணிகள், 30 விமானங்கள்

கோவை விமான நிலையத்தில் அக்டோபர் மாதம் தினசரி பயணிகள் எண்ணிக்கை 10,000 ஆகவும், விமானங்கள் எண்ணிக்கை 30 ஆகவும் அதிகரிக்க வாய்ப்பு. உள்நாடு மற்றும் வெளிநாட்டு பிரிவுகளில் சேவைகள் அதிகரிப்பதால் 4 ஆண்டுகளுக்கு பின் முன்னேற்றம்.


கோவை: கோவை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பிரிவுகளில் சேவைகள் அதிகரிப்பதால், கரோனா நோய்தொற்று பரவலுக்கு பின் அக்டோபர் மாதம் தினசரி பயணிகள் எண்ணிக்கை 10 ஆயிரமாகவும், விமานங்கள் எண்ணிக்கை 30-ஆக அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை விமான நிலையத்தில் கடந்த 2020-ம் ஆண்டு கரோனா நோய்தொற்று பரவல் ஏற்படுவதற்கு முன் தினமும் 35 அல்லது 36 விமானங்கள் இயக்கப்பட்டன. தவிர தினமும் 10 ஆயிரம் பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்தினர். தற்போது விமான சேவைகள் தொடர்ந்து விரிவுபடுத்தப்படுவதால் தினசரி இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தில் 27 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொங்கு குளோபல் போரம் (கேஜிஎப்) கூட்டமைப்பின் இயக்குநர் சதீஷ் கூறுகையில், "கோவை விமான நிலையத்தில் விமான சேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஹைதராபாத்துக்கு தினசரி மூன்று விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் கூடுதலாக ஒரு சேவை சேர்க்கப்பட்டுள்ளது. கோவை-கோவா இடையே ஏற்கெனவே வழங்கப்பட்டு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட சேவை அக்டோபரில் மீண்டும் தொடங்கப்படுகிறது," என்றார்.

மேலும் அவர், "கோவை-அபுதாபி இடையே வழங்கப்பட்டு வரும் சேவை குளிர்கால அட்டவணையிலும் சேர்க்கப்பட்டு சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை-சிங்கப்பூர் இடையே தற்போது வாரத்தில் அனைத்து நாட்களிலும் ஸ்கூட் நிறுவனம் சார்பில் விமான சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில், அக்டோபர் 27-ம் தேதி முதல் சிங்கப்பூருக்கு மேலும் ஒரு விமான சேவை தொடங்கப்படுகிறது," என்று தெரிவித்தார்.

விமான சேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அக்டோபர் மாதத்தில் தினசரி பயணிகள் எண்ணிக்கை 10 ஆயிரமாகவும், விமானங்கள் எண்ணிக்கை 30-ஆகவும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கரோனா நோய்தொற்று பரவலுக்கு பின் கோவை விமான நிலையத்தில் பழைய நிலை காண வாய்ப்பு உருவாகியுள்ளது.

நவம்பர் மாதத்தில் உள்நாட்டு பிரிவில் கோவையில் இருந்து டெல்லிக்கும், வெளிநாட்டு பிரிவில் இலங்கை மற்றும் கோலாலம்பூர் ஆகிய நாடுகளுக்கு விமான சேவைகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. "கோவை விமான நிலையம் சிறப்பான வளர்ச்சி பெற்று வருவது சுற்றுப்புற ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்," என்று சதீஷ் குறிப்பிட்டார்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...