கோவையில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன் குமார் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன் குமார் தலைமையில் தொழிற்சங்கங்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தொழிலாளர் நலத்திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கட்டுமான நலவாரிய தலைவர் பொன் குமார் தலைமையில் தொழிற் சங்கங்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.



இந்த கலந்தாய்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, நலவாரிய ஊழியர்கள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.



கலந்தாய்வின்போது தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்களின் குறைகள் கேட்கப்பட்டு அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது.



இறுதியில் தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.



கூட்டத்தில் பேசிய பொன் குமார், "வாரியப் பணிகள் சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. மேலும், 2006 - 2011 ஆண்டு திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களின் தொகை உயர்த்தப்படவில்லை. திமுக அரசு வந்த பிறகு, விபத்துக்கான நிதி 1 லட்சத்திலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கல்வி உதவி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. திருமண உதவி ₹5000 லிருந்து ₹20,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பேறுகால உதவி ₹6000 இருந்து ₹18,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது," என்றார்.

மேலும் அவர், "வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்டிக் கொள்ள 4 லட்சம் ரூபாய் இலவசமாக வழங்கப்படுகிறது. கட்டுமான தொழிலாளர்களின் பிள்ளைகள் ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்விக்கு சென்றால், கல்லூரி கட்டணம் மற்றும் விடுதி கட்டணத்தை அரசு ஏற்றுக்கொண்டு, ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் அளிக்கப்படுகிறது. தொழிலாளி இறந்துவிட்டால், அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் முழு செலவையும் வாரியம் ஏற்றுக்கொள்கிறது. குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட தொழிலாளிகளுக்கு மாதம் ₹1000 உதவித்தொகை அளிக்கப்படுகிறது," என்று கூறினார்.

திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்ட அவர், "திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து வாரியங்களிலும் ஏறத்தாழ 1600 கோடி ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகளாக அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்றாண்டு கால ஆட்சியில், கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் மட்டும் ஏறத்தாழ 11 லட்சம் தொழிலாளர்கள் புதிதாக பதிவு செய்துள்ளனர். இதுவரை கோவையில் மட்டும் 1 லட்சத்து 49 ஆயிரம் தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் திமுக அரசு வந்த பிறகு மட்டும் 42 ஆயிரம் பேர் புதிதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும், ஏறத்தாழ 42 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 66 கோடி ரூபாய் நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டுள்ளது," என்றார்.

தொழிலாளர்களின் தரவுகள் தொலைந்ததாக வந்த செய்திகளை மறுத்த அவர், "தொழிலாளர்களின் டேட்டாக்கள் கணினியில் இருக்கிறது. மழை மற்றும் கணினியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சில தொழிலாளர்களின் ஆவணங்கள் காணாமல் போனது உண்மை. கணினி செயல்படாமல் போனதற்கு யாரையும் நாம் குறை சொல்ல முடியாது," என்று விளக்கமளித்தார்.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்து கருத்து தெரிவித்த அவர், "தமிழ்நாட்டில் இருப்பது போன்ற 18 வாரியங்கள், இந்தியாவின் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லை. அதனால்தான் இதை திராவிடம் மாடல் ஆட்சி என்கிறோம். பலருக்கு இது கசப்பாக உள்ளது. கசப்பின் வெளிப்பாடாகவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நிதி அமைச்சர், தமிழ்நாட்டைப் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லாமல் பட்ஜெட் உரையை படித்துள்ளார். கோவை மெட்ரோ ரயில் திட்டம் நிதிகேட்டு எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பணம் கொடுக்காததால் மாநில அரசின் பணத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது," என்று குற்றம்சாட்டினார்.

வடமாநில தொழிலாளர்கள் குறித்தும் அவர் பேசினார். "தமிழ்நாட்டில் வேலை செய்யும் வரை, வடமாநில கட்டுமான தொழிலாளர்களுக்கும் அனைத்து உதவிகளும் கிடைக்கும். இதுவரை 6000 வடமாநில தொழிலாளர்களை பதிவு செய்துள்ளோம்," என்றார்.

இறுதியாக, ஓய்வூதியம் குறித்து பேசிய அவர், "ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உயிரோடு இருக்கும் வரை அவர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்படும்," என்று உறுதியளித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...