தமிழகத்தில் சமவெளி பகுதிகளிலும் கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிலும் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்து வரும் நிலையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
இதனால் நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட உதகை, குன்னூர் போன்ற பகுதிகளில் அதிகளவில் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஒரு பகுதியை கடக்க பல மணிநேரம் ஆகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு மாவட்ட காவல்துறை இதுவரை எந்த கோடைக் காலங்களிலும் இல்லாத அளவிற்கு வாகன கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளது.
அதன்படி, கடந்த சனிக்கிழமை முதல் (ஏப்ரல் 8) வரும் மே 31ம் தேதி வரை கோவையிலிருந்து உதகைக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் காட்டேரி ஜங்ஷனிலிருந்து கேத்தி பாலடா வழியாக உதகைக்கும், கர்நாடகாவிலிருந்து கல்லட்டி வழியாக வரும் இலகுரக வாகனங்கள் தலைக்குந்தாவிலிருந்து புதுமந்து வழியாக உதகைக்கும், இதேபோல் கேரளாவிலிருந்து தலைக்குந்தா வழியாக வரும் இலகுரக வாகனங்கள் குலிச்சோலை வழியாக உதகைக்கு அனுமதிக்கப்படும்.
உள்ளூர் வாகனங்கள் தவிர்த்து வேறு எந்த வாகனங்களும் கல்லட்டி மலைபாதையில் அனுமதிக்கப்படமாட்டாது என்று நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா தெரிவித்துள்ளார்.