கோவை மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் வகையில் தன்னார்வலர்கள், இளைஞர்கள், பொதுமக்களால் உருவாக்கப்பட்டதே கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஆகும்.
இக்குழுவினர் வார இறுதிநாளான ஒவ்வொரு ஞாயிறன்றும் நீர்நிலைகளில் களப்பணியில் ஈடுபட்டு தூர்வாரி வருகின்றனர். அதன்படி கடந்த சில வாரங்களுக்கு முன்பு பேரூர் செல்வசிந்தாமணி குளத்தில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டு முழுவதுமாக சீரமைத்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, கடந்த வாரம் வெள்ளலூர் குளத்தில் களப்பணியில் ஈடுபட்டு சீமைக்கருவேள மரங்களை அகற்றினர். தொடர்ந்து, இன்று ஆத்துப்பாளம் அருகே வெள்ளலூர் தடுப்பணையில் உள்ள சாக்கடை கழிவுகளை அகற்றி தூர்வாரும் பணி நடைபெற்றது. இதில் சுமார் 150-க்கும் மேற்பட்ட கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் இணைந்து லாரிகள் மூலம் குப்பைக் கழிவுகளை அகற்றினர்.

இதுகுறித்து, இக்களப்பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் கூறுகையில், இன்றைய ஞாயிறு எங்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. நாங்கள் கோவையில் பல குளங்களை சீரமைத்து வருகிறோம். இன்று கோவையின் பழமைவாய்ந்த வெள்ளலூர் குளத்தினை தூர்வாரி ஒரு லாரி முழுக்க கழிவுகளை அகற்றியுள்ளோம். இவை அனைத்தும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் கழிவுகள். மாநகராட்சி நிர்வாகமும் எங்களுக்கு உதவி வருகிறது. கோவை மாநகராட்சி ஊழியர்கள் 20 பேரும் மற்றும் 3 லாரிகள் இன்று எங்களுக்கு உதவிக்காக வழங்கப்பட்டுள்ளது. இன்றைய களப்பணியில் மேலும் பலர் புதிதாக வந்து சேவையாற்றியுள்ளனர்' என்றார்.
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆர்.வி.மணிகண்டன் இதுகுறித்து கூறுகையில், கோவையில் வரலாற்று சிறப்புமிக்க குளங்களில் ஒன்று வெள்ளலூர் குளம். இக்குளத்தினை சமீபகாலமாக சரிவர பராமரிக்காததால் தற்போது பயனற்று கிடக்கிறது. மேலும், தொழிற்சாலைக் கழிவுகள், குடியிருப்புக் கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்களால் வெள்ளலூர் குளம் சிதலமடைந்துள்ளது.

இதனை தூர்வாரும் பணியில் இன்று கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் ஒன்றிணைந்து ஏராளமான கழிவுப் பொருட்களை அகற்றியுள்ளோம். மேலும், இக்குளத்திற்கு நீர் வரும் வாய்க்கால்கள் முழுவதும் கழிவுப் பொருட்களால் அடைபட்டுள்ளது. குளத்தில் 3 முதல் 4 அடி ஆளம் வரை பிளாஸ்டிக் மற்றும் வீட்டுக் கழிவுகளே உள்ளன. அதனை முழுவதுமாக அகற்றி வருகிறோம். இதனை அகற்றினால் மட்டுமே இனி வரும் மழைக்காலத்தில் நீர் முழுவதுமாக சேமிக்கப்படும்.

மேலும், பொதுமக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். கழிவுநீர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை நீர்நிலைகளில் கொட்டுவதை நிறுத்தினால் மட்டுமே முழுமையாக நீர்நிலைகளை பாதுகாக்க முடியும்' என்றார்.