பள்ளிப்படிப்பை முடித்த அனைவரும் கட்டாயம் 100 சதவீதம் உயர்கல்வி படிக்கவேண்டும். தமிழ்நாட்டில் பொருளாதார உயர்வுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவுறுத்தியுள்ளார்.
கோவை: கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி, மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் இன்று(09.05.2024) நான் முதல்வன்திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவ மாணவியர்களுக்கான கல்லூரிக் கனவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடிதலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் நான் முதல்வன் கல்லூரி கனவு வழிகாட்டிக் கையேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்ரின் சரண்யா, பொள்ளாச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி, டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி செயலாளர் ராமசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிட் இயக்குநர் முனைவர் கவிதாசன், இரா.கேசவக்குமார்(இடைநிலைக்கல்வி), மாவட்ட கல்வி அலுவலர்கள் வள்ளியம்மாள்(தொடக்கக் கல்வி), பாரதியார் பல்கலைக்கழக விரிவாக்கம் தொழில் வழிகாட்டுதல் துறை பேராசிரியர்கள் முனைவர் கௌதம், பி.சத்யா, வேலைவாய்ப்பு தொழில் நெறிவழி காட்டுமையம் துணை இயக்குநர் எம்.கருணாகரன், வால்பாறை அரசினர் தொழிற்பயிற்சி நிலை பயிற்சி அலுவலர் பி.நடராஜன், இயந்திர பொறியியல் துறைத்தலைவர் கே.ரமேஷ், வட்டாட்சியர் சி.ஜெயசித்ரா, மற்றும் மாணவ, மாணவியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது, அரசுப்பள்ளிகளில் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதை 100 சதவீதம் உறுதிசெய்யும் பொருட்டு நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளில் சேர உதவும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் கல்லூரி படிப்புகள் மற்றும் கல்லூரிகள் சார்ந்த விவரங்களை அறிந்து கொள்ளும் பொருட்டும் உயர்கல்வியின் முக்கியத்துவம் சார்ந்த விழிப்புணர்வைப் பெறும் பொருட்டும் கல்லூரிக் கனவு என்னும் இந்நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
அரசுப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி பயிலும் மாணவியர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், அரசுப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 12ஆம் வகுப்பு மட்டும் படித்து விட்டு வேலைக்கு சென்றால் தினசரி வருமானம் மிக குறைவாக இருக்கும். ஆனால் பட்டப்படிப்பு படித்து விட்டு வேலைக்கு சென்றால் ஆரம்ப காலங்களில் மாதம் ரூ.10000க்கு மேல் வருமானம் கிடைக்கும். மேலும் ஒரு சில ஆண்டுகளின் ரூ.20000 வரை வருமானம் கூடுதலாக கிடைக்கும்.
வருங்காலத்தில் அறிவுமிக்கவர்களாகவும், சமுதாய மதிப்பு மிக்க மனிதர்களாகவும் வாழ்வதற்கு உயர்கல்வி அவசியம். எனவே பள்ளிப்படிப்பை முடித்த அனைவரும் கட்டாயம் 100 சதவீதம் பேர் உயர்கல்வி படிக்கவேண்டும். தமிழ்நாட்டில் பொருளாதார உயர்வுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்களுக்கு எந்தவிதமான துறையில் ஈடுபாடு, அதற்கு என்ன படிக்கவேண்டும், என வழிகாட்டுதலை வழங்க பல்வேறு துறை வல்லூர்கள் இருக்கின்றார்கள். அனைத்து துறைகளும் ஒரு குடும்பமாக இணைந்து உங்களுக்கான வழிகாட்டுதலை வழங்குகின்றன.
கல்லூரி படிப்பதற்கு பெற்றோரை விட்டு, வேறு இடங்களுக்கு செல்லவேண்டிய சூழ்நிலை உருவாகலாம். அந்த சூழ்நிலைக்கு தகுந்தவாறு உங்களை மாற்றிக்கொண்டு கல்லூரி படிப்பினை சிறப்பாக மேற்கொண்டால் வெற்றி அடைய முடியும். 12ஆம் வகுப்பு முடித்த பிறகு என்னென்ன படிக்கலாம் என்பதற்கான வழிகாட்டுதல், அரசின் திட்டங்கள் மற்றும் உதவித்தொகை, குறித்த விழிப்புணர்வு இன்றைய நிகழ்ச்சியில் வழங்கப்படுகிறது.
துறையைச் சார்ந்த வல்லுநர்கள் மூலம் மாணவர்களுக்கு பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல், சட்டம் மற்றும் அதனைச் சார்ந்த படிப்புகள் குறித்த விவரங்களையும், ஐடிஐ, பாலிடெக்னிக் உள்ளிட்ட உயர்கல்வி பயில்வதற்கு தேவையான ஊக்குவிப்பும், வழிகாட்டுதலும் வழங்கப்படுகின்றது. கல்லூரி படிப்பினை படிப்பதற்கு பொருளாதார வசதிஇல்லை. உடனடியாக வேலைக்கு செல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள், பாலிடெக்னிக், ஐடிஐ படிப்பினை படிக்கலாம். இதன்மூலம் சுயமாக தொழில் செய்யலாம்.
தொழிற்நிறுவனங்களிலும் உடனடியாக வேலை கிடைக்கும். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உயர்கல்வி நிறுவனங்கள், அரசு துறைகள், வங்கிகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இந்தவாய்ப்பினை மாணக்கர்கள் பயன்படுத்திக் கொண்டு, உங்களது உயர்கல்வியினை சிறப்பான முறையில் கற்று உயர்நிலையை அடையவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்.