செந்தில் பாலாஜி எந்த தவறும் செய்யவில்லை என முதலமைச்சரால் கூற முடியுமா? - வானதி சீனிவாசன் கேள்வி!

கோவையில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சிக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த காலத்தில் எந்த தவறும் செய்யவில்லை என்று முதலமைச்சரால் சொல்ல முடியுமா? என்றும், இதற்கு அரசியல் ரீதியாக பாஜக மீது பழி சுமத்த முடியுமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.



கோவை: செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது எந்த தவறும் செய்யவில்லை என முதலமைச்சரால் கூற முடியுமா என பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை அடுத்த ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற பாஜக கட்சி நிகழ்ச்சியில் பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் பேசியதாவது, 



கோவை மாநகர் மாவட்டத்தின் சார்பாக தேசிய தலைமை முடிவு செய்தபடி ஜூன் ஒன்றாம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை வெகுஜன தொடர்பு இயக்கத்தை நடத்தி கொண்டிருக்கிறோம். இன்று மாநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளாக இருந்தவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கட்சியின் மூத்த காரியத்தர்கள், அனைவருக்குமான அரங்க கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பாஜக கடந்த 9 ஆண்டு காலமாக நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் செய்திருக்க கூடிய சாதனைகளைப் பற்றி மத்திய அரசின் திட்ட பயனாளிகளை சந்திப்பது அவர்களுடன் கலந்துரையாடுவது கட்சி நிர்வாகிகளோடு தனித்தனியாக சந்திப்பு என இந்த மாதம் முழுவதும் பாஜகவினர் நாடு முழுவதும் பிஸியாக உள்ளனர். கோவையை பொருத்தவரை தனித்து நின்ற போதும் கூட உள்ளாட்சி பிரதிநிதிகளை பாஜக பெற்றிருந்தது. 

பாஜகவிற்கென இப்பகுதியில் குறிப்பிடத்தக்க வாக்கு சதவிகிதத்தை எப்பொழுதும் வைத்துக் கொண்டிருக்கிறோம். தற்போதும் கூட சட்டப்பேரவையில் பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினரை கோவை மக்கள் கொடுத்திருக்கிறார்கள். எங்களுடைய வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். 

இன்று வந்திருக்கக்கூடிய முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் சரி போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும் சரி அவர்களை எப்படி கட்சி பணிகள் தீவிரமாக ஈடுபடுத்துவது அவர்கள் பகுதியில் அவர்களுக்கு இருக்கின்ற செல்வாக்கை எப்படி மேம்படுத்துவது?

 

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆக அவர்களை மாற்றிக் கொள்வதற்கு அவர்கள் வெற்றி பெறுவதற்கு எம்மாதிரியான மோடி அரசின் திட்டங்களை எடுத்துச் செல்வது என்பதை பற்றி இந்தக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்படும். தமிழகத்தின் சூழல் கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகா தற்போது வேறு நபர்களுக்கு மாற்றப்பட்டுள்ளது என்பதால், செந்தில் பாலாஜியை முன்னாள் அமைச்சர் என குறிப்பிட்டார். 

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு உடல் நிலை காரணமாக தற்போது அவர் மருத்துவமனையில் இருக்கிறார். இந்த கைதுக்கும் விசாரணைக்கும் மாநில அரசை நடத்துபவர்கள் மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எல்லாம் சேர்ந்து கண்டன அறிக்கை விடுவது கண்டன ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் பாஜகவை பிரதமரை இதற்கெல்லாம் குறிப்பிட்ட அரசியல் கட்சி தான் காரணம் என்கின்ற ரீதியில் மக்கள் முன்பு தவறான கருத்துக்களை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். 

மாநிலத்தின் முதல்வர் எங்களை யாரும் மிரட்டி பார்க்க முடியாது பணிய வைக்க முடியாது எனக் கூறி வருகிறார். அவர் மத்திய பாஜக அரசை சொல்கிறாரா?, இல்லை தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தை கூறுகிறாரா? என புரியவில்லை.

அரசியல் ரீதியாக பாஜக மீது பழி சுமத்த முடியுமா என முதல்வர் பார்க்கிறார். அவரை துன்புறுத்துகிறார்கள் எனக்கூறும் இவர்கள் அவர் தவறு செய்யவில்லை என எங்கேனும் கூறி இருக்கிறீர்களா?, செந்தில் பாலாஜி குற்றமற்றவர், அவர் அமைச்சராக இருந்த காலத்தில் எந்த தவறும் செய்யவில்லை என்று முதலமைச்சரால் சொல்ல முடியுமா?. ஆக ஒருபுறம் இதற்கு முன்பாக நீங்கள் பேசியது இதெல்லாம் சினிமா படத்தில் வருவதைப் போல் இதெல்லாம் நீங்கள் தானா என்று கேட்பது போல் உள்ளது. 

அமலாக்கத்துறை விசாரணை என்பது உச்சநீதிமன்றத்தால் அறிவுறுத்தப்பட்டு அதன்படி நடந்து கொண்டிருக்கிறது. முழுமையாக விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது சம்பந்தப்பட்ட நபர்களுடைய கடமை. அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது மாநில அரசாங்கத்தின் கடமை. 

இவற்றையெல்லாம் விட்டுவிட்டு கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரே மேடையில் ஒன்றாக நிற்பதற்கு வாய்ப்பு கிடைத்தது என்று கூறி மக்களை திசை திருப்புவதற்காக நாடகத்தை எல்லாம் நடத்த வேண்டாம் மக்கள் நம்பப் போவதில்லை. 

பாஜக அண்மை காலமாக எவ்வளவு ஊழல் நடக்கிறது என கூறிக் கொண்டே வருகிறோம். அப்போதெல்லாம் ஆதாரம் கேட்ட செந்தில் பாலாஜி தற்போது ஆதாரத்தை கொண்டு வந்து காண்பித்த பிறகு அய்யய்யோ துன்புறுத்துகிறார்கள் என்னை மிரட்டி பார்க்கிறீர்களா என கூறுகிறார்கள். இதற்கெல்லாம் ஆதாரம் அமலாக்கத்துறையிடம் உள்ளது. 

அதற்கான பதிலை அவர் நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம். நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற மனப்பாங்கிலிருந்து முதலமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் முதலில் வெளியில் வரவேண்டும். 

குற்றம் செய்பவர்களின் மாமன் மச்சான் மாப்பிள்ளை யாராக இருந்தாலும் சட்டப்படி அவர்கள் எதை எதிர் கொள்ள வேண்டுமோ அதை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். தற்போது நடவடிக்கை எடுத்திருப்பது கட்சி ஆட்சி கிடையாது தற்போது நடவடிக்கை எடுத்திருப்பது நீதிமன்றம். சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும் என்பதுதான் பாஜகவின் கொள்கை. 



திமுகவிற்கே சம்பந்தம் இல்லாமல் பொய் பேசுவது தான் பழக்கம். DMK பைல்ஸ் அடுத்தது அறிவிக்கப் போகிறோம் என மாநில தலைவர் கூறி இருக்கிறார் அறிவிக்கட்டும் பார்க்கலாம். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஒவ்வொரு வீட்டிற்கும் கொலுசு, ஹாட் பாக்ஸ், கொடுத்ததை எல்லாம் பார்த்துள்ளோம். 

தேர்தலின் போது கூட எனது தொகுதியிலேயே திமுகவினர் பணம் கொடுத்தார்கள். மத்திய அரசில் இருக்கின்ற ஒவ்வொரு துறையும் சுதந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்தத் துறைகளுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. 

சீமான் பேசிய அத்தனை உரிமைகளும் அனைத்தும் பாதுகாக்கப்பட்டு இருக்கக்கூடிய ஜனநாயக நாடாக இந்த நாடு உள்ளது. அவரது பேச்சு உரிமையை அவர் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார். பாஜக ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் கூட பாஜக கட்சியினரே இந்த நிலைமைக்கு ஆளாகியுள்ளார்கள், பணமதிப்பிழப்பு உட்பட பல்வேறு விஷயங்களில் தவறு செய்திருந்தால் கூட பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கவில்லை. 

யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கிறார்கள். செந்தில் பாலாஜி முதல்வர் குடும்பத்துடன் நெருக்கமாக இருக்கிறார் முதல்வரின் மனதிற்குள் போய்விட்டார். முதல்வரையே திட்டியவர் எப்படி அவரது மனதிற்குள் சென்று விட்டார் என்பதை அவரிடம் கேட்டு தான் சொல்ல வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...