மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மொத்த காய்கனி மார்க்கெட்டை இடமாற்றம் செய்யும் போது, தரமான சாலைகளுடன் சுற்றுச்சுவர், மின் வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து தர வலியுறுத்தி ஆட்சியரிடம் வியாபாரிகள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.
கோவை: மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யும் போது பல்வேறு வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் வியாபாரிகள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.
கோவை மாநகராட்சி நிர்வாகம் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மொத்த காய்கனி மார்க்கெட்டை அபிவிருத்தி செய்ய முடிவெடுத்துள்ளது. இதனால் அங்குள்ள கடைகளை எருக்கம்பெனி மைதானத்தில் அமைத்துக் கொள்ளும்படி வியாபாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் எம்ஜிஆர் மார்க்கெட் காய்கனி வியாபாரிகள் சங்கத்தினர் தாங்கள் அதே இடத்திலேயே கடைகளை அமைத்துக் கொள்கிறோம் எனவும் வேறு இடத்திற்கு மாற்றும் பொழுது தங்களுக்கு பல்வேறு வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் எருக்கம்பெனி வளாகத்தில் சாலைகள் கழிப்பிட வசதி, மின் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட எவ்வித வசதிகளும் இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த இடத்தில் கடைகளை அமைக்கும் பொழுது 20 டன், 30 டன் லோடு ஏற்றி வரும் வாகனங்கள் மண்ணில் புதைந்து விடும்.
எனவே புதிய மார்க்கெட் இடமாற்றம் செய்யும் பொழுது கடைகள் அமைப்பதற்கான வசதி, தரமான சாலைகளுடன் சுற்றுச்சுவர், மின் வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் உணவருந்த தேவையான கேண்டீன் உள்ளிட்ட வசதிகள் சாக்கடை வசதி காய்கறிகளை இறக்கி வைத்து வியாபாரம் செய்ய போதுமான இடங்கள் ஆகியவற்றை செய்து தர வேண்டும்.
அதுவரை தாங்கள் இதே இடத்திலேயே வியாபாரம் செய்து கொள்வதாகவும் சாலைகளை மட்டும் பழுது பார்த்துக் கொடுத்தால் போதுமானது.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.