வந்தே பாரத் ரயில் கொங்கு மண்டலத்திற்கு மிகவும் பயனளிக்கும்! - கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் நம்பிக்கை

சென்னையில் இருந்து கோவைக்கு வந்த வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், அதில் பயணித்து வந்த கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், விமானங்களில் இருக்கும் அனைத்து வசதிகளும் வந்தே பாரத் ரயிலில் உள்ளதாக தெரிவித்தார்.



கோவை: வந்தே பாரத் ரயிலானது கொங்கு மண்டலத்திற்கு பல்வேறு வகையில் பயன்படும் என பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை - கோவை நகரங்களை இணைக்கும் தமிழகத்திற்குள்ளான முதல் வந்தே பாரத் ரயில் சேவையை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிரதமர் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.



சென்னை - கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் நேற்று இரவு 11.05 மணியளவில் கோயம்புத்தூர் ரயில் நிலையம் வந்தடைந்தது. தானியங்கி கதவு, எல்இடி திரைகள், முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதி என பல்வேறு நவீன அம்சங்களை கொண்ட வந்தே பாரத் ரயிலின் முதல் சேவையில் பயணித்த பயணிகள் மகிழ்ச்சியாக கோயம்புத்தூர் ரயில் நிலையம் வந்தடைந்தனர்.

பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வந்தே பாரத் ரயிலின் முதல் பயணத்தில் சென்னையில் இருந்து கோவை வந்தடைந்தார். கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் பாஜக சார்பில் வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



வந்தே பாரத் ரயிலில் பயணித்து கோவைக்கு வந்த பின்னர், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசியதாவது, தமிழகத்திற்கான முதல் வந்தே பாரத் ரயில் சேவையை பாரத பிரதமர் அவர்கள் துவக்கி வைத்திருப்பது சிறப்பான ஒன்றாகும்.

வந்தே பாரத் ரயில் சேவையின் மூலம் முக்கியமான நகரங்கள் குறைந்த நேரத்தில் இணைக்கப்படுகிறது. ஒரு விமானத்தில் இருக்கும் அனைத்து வசதிகளும் இதில் உள்ளது. 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் சென்றாலும் எந்த விதமான அதிர்வுமின்றி பயணிக்க முடிகிறது.

அடுத்தடுத்த ரயில் நிலையங்கள் குறித்த தகவல்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை வசதி, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி எழுத்து வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதாக வந்தே பாரத் ரயில் உள்ளது.

வந்தே பாரத் ரயில் திட்டத்திற்காக பாரத பிரதமருக்கு மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். பாரத பிரதமர் வலியுறுத்தும் ஆத்ம நிர்பர் திட்டத்திற்கு சான்றாக இந்த ரயில் முழுக்க முழுக்க இந்தியாவில், இந்திய தொழில் நுட்பத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது தனி சிறப்பாகும்.

குறிப்பாக, கொங்கு மண்டலத்திற்கு வந்தே பாரத் ரயில் சேவை மிகப்பெரிய பயன் அளிக்கும். தொழில், கல்வி உட்பட பல்வேறு தேவைகளுக்காக பல்வேறு நகரங்களோடு இணைக்கப்படுவதால் மேற்கு தமிழ்நாட்டிற்கு வந்தே பாரத் ரயில் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஐசிஎப்-ல் தயாரிக்கப்பட்ட இந்த ரயில் இந்தியா முழுவதும் செல்வது தமிழகத்திற்கு பெருமையாகும். தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயிலை கோவைக்கு கொடுத்ததற்காக கோவை மக்கள் சார்பாக பாரத பிரதமருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒவ்வொரு முறையும் பாரத பிரதமர் தமிழகத்திற்கு வரும்போது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அள்ளித் தருகிறார். டெல்லியில் இருந்து கை நிறைய திட்டங்களோடு தமிழகத்திற்கு வரும் பாரதப் பிரதமரை தமிழகம் அன்போடு வரவேற்கிறது.

வரும் காலங்களில் பிரதமர் தமிழகத்திற்கு அதிகமாக வருவார் என எதிர்பார்க்கிறோம். வைஃபை, குளிரூட்டப்பட்ட வசதி போன்ற பல்வேறு நவீன வசதிகள் இந்த ரயிலில் இருப்பதால் இதன் விலை அதிகமாக தெரியலாம். தற்போது 8 பெட்டிகளோடு இயங்கி வருகிறது.

வரும் காலங்களில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். மாநில அரசு இதனை முழுமையாக வரவேற்க வேண்டும். இதுபோன்று மத்திய அரசின்திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளித்தால் தமிழகத்தின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...