கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், இரண்டு ஆண்டுகளில் வெறுப்பை சந்திக்கின்ற அரசாக திமுக உள்ளதாக விமர்சனம் செய்தார்.
கோவை: இரண்டு ஆண்டுகளில் வெறுப்பை சந்திக்கின்ற அரசாக திமுக உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார்.
கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பதவியேற்புக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதன்முறையாக கோவைக்கு வருகை புரிந்ததற்கு வரவேற்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.வேலுமணி, அம்மன் அர்சுணன் உள்ளிட்டோரும், நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி அம்மா(ஜெயலலிதா) மறைவுக்கு பிறகு எவ்வளவோ பிரச்னைகளை சந்தித்து வருகிறோம் எனவும், பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி இருபெரும் தலைவர்கள், பொதுச்செயலாளர் பதவியில் இருந்த நிலையில் எளிய தொண்டனாக இருந்த நான், பதவி ஏற்றுள்ளேன். ஆனால் திமுகவில் அப்படி வர முடியாது, வாரிசுகள் மட்டுமே தலைவர் பதவிக்கு வந்துள்ளனர். ஜனநாயக ரீதியாக உள்ள கட்சி இந்தியாவில் அதிமுக மட்டுமே. வேறு எந்த கட்சியிலும் எளிய தொண்டன் உயர்ந்த நிலைக்கு வர முடியாது.
திமுக ஒரு கம்பெனி போல் செயல்பட்டு வருவதாகவும், திமுகவில் ஆட்சியிலும், கட்சியிலும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் உயர் பதவியில் இருக்கிறார்கள். அதிமுக ஆட்சியிலிருந்தபோது பொற்கால ஆட்சியை கொடுத்ததாகவும், இரண்டே ஆண்டில் மக்கள் வெறுப்பை சந்திக்கிற அரசாக திமுக மாறியுள்ளதாக விமர்சனம் செய்தார்.