கோவை துடியலூரை அடுத்த குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆனந்த பொன்னுசாமி நகர் பகுதியில் தார் சாலை மற்றும் இதர பணிகளை செய்த ஊராட்சித் தலைவர், மாவட்ட கவுன்சிலர், ஒன்றியக் கவுன்சிலர், ஊராட்சித் துணைத் தலைவர் ஆகியோருக்கு நலச்சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
கோவை: கோவை அருகே அடிப்படை வசதி பணிகளை செய்த ஊராட்சி தலைவர் ரவி உள்ளிட்டோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆனந்த் பொன்னுசாமி நகர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஊராட்சி சார்பில் மாநில நிதிக்குழு மானியத்திலிருந்து ரூ.4.50 லட்சம் மதிப்பில் தார் சாலையும், 15வது நிதிக்குழு மானியத்திலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பில் சாலை பணிகள் மற்றும் இதர பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இப்பணிகளைச் செய்து கொடுத்த குருடம்பாளையம் ஊராட்சித் தலைவர் ரவி, மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், ஒன்றியக் கவுன்சிலர் ஆறுச்சாமி, ஊராட்சித் துணைத் தலைவர் வசந்தாமணி விஸ்வநாதன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆன்ந்த் பொன்னுசாமி நகர் நலச்சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் அப்பகுதியில் போடப்பட்டுள்ள புதிய தார்ச்சாலையினை ஊராட்சித் தலைவர் ரவி ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் ஊராட்சித் தலைவர் ரவி, மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், ஒன்றியக் கவுன்சிலர் வேலுச்சாமி, ஊராட்சித் துணைத் தலைவர் வசந்தாமணி விஸ்வநாதன் ஆகியோருக்கு நலச்சங்கம் சார்பில் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஊராட்சித் தலைவர் ரவி, இப்பகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ஊராட்சி தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் இப்பகுதியில் உள்ள பூங்காவிற்கு தேவையான குழந்தைகள் விளையாட்டு உபகரணங்களை விரைவில் அமைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.