கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள வரதராஜபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
கோவை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து பல்வேறு பள்ளிகளில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. காலையில் உண்பதற்கு உகந்த பொங்கல், இட்லி, சுண்டல் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் மாணவ-மாணவியருக்கு வழங்கப்படுகின்றன.
அதன் தொடர்ச்சியாக, கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அப்போது,பள்ளி மாணவர்களுடன் இருவரும் அமர்ந்து காலை உணவை அருந்தினர். இந்நிகழ்ச்சின் மாமன்ற உறுப்பினர் இலக்குமி இளஞ்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, கோவை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.