திருப்பூரில் திராவிடர் கழக பொதுக்கூட்டத்தில் பேசிய கி.வீரமணி, தமிழ்நாட்டில் நாங்கள் தான் எதிர்க்கட்சி என கூறும் பாஜக இடைத்தேர்தலில் போட்டியிடாதது ஏன் என்றும் அண்ணாமலையே போட்டியிட்டு பலத்தை நிரூபித்திருக்கலாமே என்றும் கூறினார்.
திருப்பூர்: தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிட்டது எனக்குறும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடாதது ஏன் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பூர் அரிசி கடை வீதியில் திராவிடர் கழகம் சார்பாக சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது,
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூக நீதியை பாதுகாக்கும் வகையிலான திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதை பொறுத்துக் கொள்ள முடியாத, தமிழகத்தில் ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாத விரக்தியில் ஒன்றிய அரசு ஏதேதோ செய்து கொண்டிருகிறது.
இதன் காரணமாகவே தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சனாதனம் திராவிட மாடலுக்கு எதிரானது.
தமிழகத்தில் நாங்கள் வளர்ந்து விட்டோம் நாங்கள் தான் எதிர்க்கட்சி என கூறிக் கொள்ளும் பாஜக அதனை உறுதிப்படுத்த ஏன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. தங்கள் பலத்தை நிரூபிக்க பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையே போட்டியிட்டிருக்கலாமே.
இதை செய்யாமல் பாரதிய ஜனதா கட்சியினர் அதிமுகவை வைத்து பொம்மலாட்டம் ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கின்றனர். அண்ணா திமுகவாக இருந்த அதிமுக தற்போது அடமான திமுகவாக மாறியுள்ளது.
எண்ணற்ற வாக்குறுதிகளை அளித்த மத்திய பாஜக அரசு அதனை எதுவும் நிறைவேற்றவில்லை. இது குறித்து கேட்டால் சும்மா எல்லாம் சும்மா சொன்னதாக உள்துறை அமைச்சர் பதிலளித்து வருகிறார்.
சேது சமுத்திரத் திட்டம் அதன் தொடக்க காலத்திலேயே நிறைவேற்றி இருந்தால் ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும் அதை விடுத்து நம்பிக்கையின் அடிப்படையில் ராமர் பாலம் இருந்ததாக காரணம் காட்டி அதனை தொடர்ந்து எதிர்க்கும் பணியை பாஜக செய்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மாநில ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.