திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நேற்றிரவு சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தலைகுப்புறக் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்த சம்பவத்தின் வீடியோக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூர் சுங்கச்சாவடி அருகே நள்ளிரவில் கார் ஒன்று வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. அப்போது, அந்தக் கார் திடீரென சுங்கச்சாவடியின் தடுப்பு சுவற்றில் மோதி தலைக்குப்புற கீழே விழுந்து தீ பிடித்து எரிந்தது. இதில் அதிர்ச்சியடைந்த கார் ஓட்டுநர் பயத்தில் உள்ளே சிக்கித் தவித்தார்.
இதனைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் காரில் இருந்த ரிஷிகேஷ் குமாரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காரில் மளமளவென பற்றியெரிந்துகொண்டிருந்த தீயை, தீயணைப்புத்துறை சிறிது நேரம் போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலையில் ஓடிய கார் திடீரென தலைகுப்புறக் கவிழ்ந்து தீப்பற்றியெரிந்த இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.