கோவை அரசு மருத்துவமனையில் இன்று 20 கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்பட்டு, 20 குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், புத்தாண்டு நாளில் இரட்டிப்பு மகிழ்ச்சியாக குழந்தைகள் வந்துள்ளதாக குடும்பத்தார் தகவல்.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் புத்தாண்டு பிறந்த இந்த நாளில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் 20 பேருக்கு இன்று பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.
இதில் 10 பெண்களுக்கு சுகப்பிரசவம் 10 பெண்களுக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டு 20 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் பத்து குழந்தைகள் ஆண் குழந்தைகள், 10 குழந்தைகள் பெண் குழந்தைகள்.
அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் இன்று ஒரே நாளில் இதுவரை 20 குழந்தைகள் பிறந்திருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புத்தாண்டு என்றாலே கொண்டாட்டம் தான். இந்த நிலையில் புத்தாண்டில் குழந்தைகள் பிறந்திருப்பது அவர்களின் குடும்பத்தாருக்கு இந்த புத்தாண்டில் இரட்டிப்பு கொண்டாட்டம் என்றால் மிகையல்ல.
ஒவ்வொரு புத்தாண்டின் போதும், வருடத்தின் முதல் நாளில், பிறந்த நாள் கொண்டாடும் தருணத்தை பெற்ற இந்த குழந்தைகள், தங்களது வாழ்நாளில் மறக்க முடியாத நினைவுகளை பொக்கிஷமாக வைக்கின்ற அளவுக்கு புத்தாண்டு கொண்டாட்டத்தோடு பிறந்த நாள் கொண்டாட்டத்தையும் அரங்கேற்றி அகம் மகிழ்வர்.
அப்படி ஒரு ஆனந்தத்தை தரக்கூடிய நிகழ்வு இன்றைய தினம் அரங்கேறி இருக்கிறது. இன்று ஒரே நாளில் 20 கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்பட்ட நிலையில் தாய், சேய் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும், மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.