மாவுத்தம்பதி ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பதி பழங்குடியினர் கிராமத்தில் டெல்லி ஐ.ஐ.டி நிதியுதவியின் மூலம் அமைக்கப்பட்ட சமுதாய உறிஞ்சிக்குழி மற்றும் நூலகம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
கோவை: கோவை மாவட்டம் மாவுத்தம்பதி ஊராட்சிக்குட்பட்ட புதுப்பதி பழங்குடியினர் கிராமத்தில் டெல்லி ஐ.ஐ.டி நிதியுதவியின் மூலம் சமுதாய உறிஞ்சிக்குழி மற்றும் மாணவர்களுக்கான நூலக திறப்பு விழா நடைபெற்றது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கோவை நவக்கரையில் அமைந்துள்ள ஏஜேகே கலை அறிவியல் கல்லூரி ஐந்து கிராமங்களைத் தத்தெடுத்து பல்வேறு சமுதாயப் பணிகளை செய்து வருகிறது.
அந்த வகையில் டில்லியில் அமைந்துள்ள இந்திய தொழில் நுட்ப கழகம் (IIT Delhi) தேசிய ஒருங்கிணைப்பு நிறுவனம், உன்னத பாரத இயக்கம் 2.0 (Unnat Bharat Abhiyan) ஒரு லட்சம் மதிப்பிலான நிதியை மாவுத்தம்பதி ஊராட்சிக்குட்பட்ட புதுப்பதி பழங்குடியினர் கிராமத்தில் சமுதாய உறிஞ்சிக்குழி (community soak pit) அமைக்கும் திட்டத்திற்கு ஏ.ஜே.கே கலை அறிவியல் கல்லூரிக்கு கொடுத்து அனுமதி வழங்கியது.
அந்தப்பணியை ஏஜேகே கலை அறிவியல் கல்லூரி சிறப்பாக நிறைவுசெய்த நிலையில் நேற்றைய தினம் (06.12.2022) சமுதாய உறிஞ்சிக்குழி திறப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் ஏ.ஜே.கே. கலை அறிவியல் கல்லூரியின் செயலர் முனைவர் பேராசிரியா் அஜித் குமார் லால் மோகன், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண் வணிக வளர்ச்சியின் பேராசிரியரும், உன்னத பாரத இயக்கத்தின் வட்டார ஒருங்கிணைப்பாளருமான முனைவர்.இ.சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு சமுதாய உறிஞ்சிக்குழியைத் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
இந்தத் திட்டம் புதுப்பதி பழங்குடியினர் மக்கள் சுகாதாரமாகவும், டெங்கு, மலேரியா போன்ற கொசு தொல்லையிலிருந்து விடுபடவும், நோயில்லாமல் வாழவும் உதவும் திட்டமாகும். ஊர்பொதுமக்கள் இத்திட்டத்திற்கு வரவேற்பு கொடுத்து இத்திட்டத்தைப் பாராட்டினர்.
அதனை தொடர்ந்து ஏஜேகே கலை அறிவியல் கல்லூரியின் தான் தாம் யோஜனா திட்டத்தின் கீழ் மாவுத்தம்பதி ஊராட்சி நூலகத்தைப் புதுப்பித்து ஏஜேகே கலை அறிவியல் கல்லூரியின் செயலர் முனைவர் பேராசிரியர் அஜித் குமார் லால் மோகன் நூலகத்தை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
மேலும், ஊர் மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படித்து பயன்பெறும் வகையில் நூலகத்திற்கு தேவையான புத்தகங்களையும் கல்லூரியின் செயலர் முனைவர் பேராசிரியர் அஜித் குமார் லால் மோகன் வழங்கினார்.
இந்த விரண்டு நிகழ்வுகளில் மாவுத்தம்பதி ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர், செயலர், ஊர் பொதுமக்கள், பேராசிரியா்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.