தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க தலைவர் ரவி சாம், சென்னையில் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து, பருத்தி உற்பத்தியை அதிகரிப்பது குறித்த திட்டம் மற்றும் பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கியுள்ளார்.
கோவை: பருத்தி நூல் உற்பத்தியில் 45 சதவீதத்தையும், விசைத்தறி துணி உற்பத்தியில் 22 சதவீதத்தையும். கைத்தறி துணி உற்பத்தியில் 12 சதவீதத்தையும், பின்னலாடை துணி உற்பத்தியில் 70 சதவீதத்தையும், வட்டு உபயோக ஜவுளி உற்பத்தியில் 40 சதவீதத்தையும் கொண்டு தமிழக ஜவுளித் தொழில் நாட்டின் மூன்றில் ஒரு பங்கு ஜவுளி வணிகத்தை தன்னகத்தே கொண்டுள்ளது.
தமிழகத்திலுள்ள நூற்பாலைகளில் 80 சதவீதத்திற்கு மேலாக சிறு, நடுத்தர, குறு வகை தொழிற்சாலைகளாகும். தமிழகத்தின் ஆண்டு பருத்தி தேவை 120 லட்சம் பேல்களாக உள்ள நிலையில், மாநிலத்தில் நான்கு முதல் ஐந்து லட்சம் பேல்களே உற்பத்தியாகின்றன.
இதனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பதவியேற்றவுடன் ஜவுளித் தொழில் மேம்படவும், பருத்தி விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும், பருத்தி வளர்ச்சி திட்டத்தை அறிவித்து அதற்கு தேவையான நிதியை ஒதுக்கினார். மேலும், 1959ம் ஆண்டு முதல் பருத்தி மற்றும் கழிவு பஞ்சு மீது நிலவி வந்த விவசாய சந்தை வரியை நீக்கினார்.
சைமா பருத்தி அபிவிருத்தி, மற்றும் ஆராய்ச்சி கழகம் தமிழக விவசாய துறையுடனும், தமிழக அரசுடனும் இணைந்து செயல்பட்டு மத்திய, மாநில அரசுகளின் பருத்தி வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டுள்ளது.
இதுகுறித்து தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் ரவி சாம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழகத்தின் தற்போதைய பருத்தி உற்பத்தியான 5 லட்சம் பேல்களில் இருந்து அடுத்த 5 வருடங்களில் 25 லட்சம் பேல்களாக உயர்த்துவதற்கான ஒரு திட்டத்தை சைமா சார்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை, நேற்றைய தினம் (21.11.2022) சென்னையில் நேரில் சந்தித்து சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
மேற்படி திட்டம் அரசின் நிதியுதவியுடன் தமிழக பருத்தி விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் விதத்தில் இருக்கும். மேலும், தரமான பருத்தி விதைகள் நவீன தொழில் நுட்பத்துடன் கிடைப்பதை உறுதி செய்வதும், பருத்தி உற்பத்தியை அதிகரிப்பதும் அதனை பன்னாட்டு தரத்துடன் உற்பத்தி செய்வதும் மிக நீண்ட இழை பருத்தி உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த திட்டம் பன்னாட்டு அளவில் நடைமுறையில் உள்ள சிறந்த வேளாண்மை செயல்முறைகளை பின்பற்றுவது, அறுவடையினை இயந்திரமயமாக்குவதன் மூலமும் நீர் சேமிப்பின் மூலமும் பருத்தி சாகுபடி செலவை குறைப்பது, உற்பத்தியை பெருக்கி, பன்னாட்டு அளவிலான நிலைத்தன்மை விதிமுறைகள் ஆகியவற்றை பின்பற்றுவதை பரிந்துரை செய்துள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட மாண்புமிகு முதல்வர் இத்திட்டத்தினை பரிசீலிப்பதாகவும், கூடிய விரைவில் அதற்கான ஒரு கூட்டத்தை கூட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேபோல் ஒட்டுமொத்த ஜவுளி உற்பத்தி சங்கிலியில் பலவீனமானதாக உள்ள ஜவுளி பதனிடும் துறையை நிலைத்த தன்மையுடைய தகுந்த தொழில்நுட்பங்களை வைத்து வவலுப்படுத்துமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சாயக்கழிவு நீரை சுத்திகரித்த பின் உண்டாகும் திட மற்றும் உப்புக்கழிவுகளை அப்புறப்படுத்த ஜீரோ லிக்விட் டிஸ்டார்ஜ் (ZLDTechnology) முறையில் தகுந்த தொழில்நுட்பம் இல்லாததாலும் இத்துறையின் முக்கிய தேவையான தண்ணீருக்கு நிலையான தீர்வு கிட்டாததாலும், தமிழகத்தில் ஜவுளி பதனிடும் துறையினை நிலைநிறுத்துவதும் அத்துறையின் உற்பத்தி அளவை உயர்த்துவதும் மிகப் பெரிய சவாலாக உள்ளது.
இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு கடலோரம் அமைக்கப்பட்ட சைமா டெக்ஸ்டைல் பிராசஸிங் நிறுவனம் என்ற ஜவுளி பூங்கா சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு முதலமைச்சரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
ஜவுளி பூங்கா செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டால் சாயக்கழிவு நீரில் உள்ள உப்பினை நீக்கும் பிரச்சினை தீர்க்கப்படும். இதன் மூலம் உலகளாவிய ஐவுளித்துறைக்கே இப்பூங்கா ஒரு முன்மாதிரியாக விளங்கும். இதுகுறித்த மனுவை பெற்றுக் கொண்ட முதலமைச்சர் அதனை பரிசீலிப்பதாக உறுதியளித்தார்.
மேலும், அமெரிக்க அரசின் தொழிலாளர் நலத்துறை பருத்தி, பருத்தி நூல், ஆயத்த ஆடைகளை TVPRA உத்தேச பட்டியலில் கொண்டு வந்துள்ளதால், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு இந்த பொருட்களை ஏற்றுமதி செய்வது தடை செய்யப்படும் நிலை ஏற்படுவதை தவிர்க்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஒரு சில அரசு சாரா அமைப்புகள் அங்கும் இங்குமாக நடக்கும் ஒரு சில தவறான சம்பவங்களை பெரிது படுத்துவதாகவும், தற்போது குழந்தை தொழிலாளர் முறை தமிழகத்தில் இல்லை.
தமிழகம், உலகளவில் ஒரு சிறந்த தொழில்மயமான மாநிலம் என்றும் சர்வதேச அளவில் தொழிலாளர் சட்டங்களை மதிக்கும் மாநிலம். சட்டங்களை தொடர்ந்து பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என சுட்டிக்காட்டினார்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், அரசே பொதுவான தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கான மற்றும் அவர்களின் நலத்தை பேணுவதற்குமான வழிகாட்டியை உருவாக்கி, அதற்கு அங்கீகாரம் வழங்கி, அதன் மூலம் ஒரு சில அரசு சாரா அமைப்புகளின் இந்த தவறான குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

மாண்புமிகு தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்த மனுக்களின் அடிப்படையில், சம்மந்தப்பட்ட அமைச்சர்களையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்து விளக்கம் தரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.