மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் மகனுக்கு காது குத்த குடும்பத்துடன் வந்து தங்கி இருந்த நிலையில், இரவு மகனும் தந்தையும் இயற்கை உபாதை கழிக்க சாலையை கடந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோவை: திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர் வடிவேல் (37). பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வடிவேல் தனது மகன் யுவன்சாய் (4) க்கு, காது குத்துவதற்காக, மனைவி மற்றும் மகள் ஆகியோருடன் கோவை மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் கோவிலுக்கு நேற்று வந்துள்ளார்.
நேற்று இரவு கோவில் மண்டபத்தில் தங்கிருந்த நிலையில், யுவன்சாய் இயற்கை உபாதை கழிக்க இரவு 11.30 மணியளவில் தனது, தந்தை வடிவேலுடன் சாலைக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் அவர்கள் மீது மோதியது.
இதில், தூக்கி வீசப்பட்ட யுவன்சாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த வடிவேலை அங்கிருந்தவர்வள் மீட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் மற்றும் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.