நாடு முழுவதும் அக்., 31 முதல் நவ., 6ம் தேதி வரை ஊழல் எதிர்ப்பு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், ஊழல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கோவையில் பேங்க் ஆப் இந்தியா வங்கி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
கோவை: ஆண்டுதோறும் அக்., 31 முதல் நவ., 6ம் தேதி வரை ஊழல் எதிர்ப்பு வாரம் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு "வளர்ந்த நாடாக உருவாக ஊழலற்ற இந்தியா" என்ற நோக்கோடு பொதுமக்களிடையே பல்வேறு அரசு துறையினரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, ஊழல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கோவையில் பேங்க் ஆப் இந்தியா வங்கி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
முன்னதாக, பள்ளி மாணவர்களிடையே "வளர்ந்த நாடாக உருவாக ஊழலற்ற இந்தியா" எனும் தலைப்பில் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, இன்று வங்கி ஊழியர்கள் சார்பில் மனித சங்கிலி மற்றும் வாக்கத்தான் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
வ.உ.சி மைதானத்தில் தொடங்கிய வாக்கத்தான் நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஊழலுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய பேங்க் ஆப் இந்தியா வங்கியின் கோவை மண்டல மேலாளர் அன்புமணி, அரசு தொடர்பான இடங்களில் பொதுமக்கள் லஞ்சம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பாக, வெளிநாடுகளை போன்று விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பள்ளியில் பயிலும் போதே லஞ்சம் குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்தினால், வருங்கால தலைமுறை ஊழலற்ற இந்தியாவாக உருவாகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பேங்க் ஆப் இந்தியா வங்கியின் மண்டல துணை மேலாளர் முனுசாமி, கோவை கிளை வங்கியின் உதவி பொது மேலாளர் ராம்தாஸ்,இண்டஸ்ட்ரியல் தொடர்பு துறை தலைமை மேலாளர், பிரவீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.