தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர் சங்க மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், கோவையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: தமிழ்நாடு காவல்துறை அமைச்சு பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் அலுவலகங்களிலும் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் கோவையில் உள்ள கோவை மாநகர காவல் அலுவலகம், மாவட்ட காவல் அலுவலகம், கோவை சரக அலுவலகம், மேற்கு மண்டல அலுவலகம், காவலர் பயிற்சி பள்ளி மற்றும் கோவைபுதூர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை நான்காம் அணி உள்ளிட்ட அலுவலகங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் கோவை மாநகர காவல் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரியும் அருள், மாநில துணைத்தலைவர் (மாவட்டம்) பொறுப்பிற்கு போட்டியிடுகிறார்.
கோவையில் உள்ள அனைத்து காவல் அலுவலகங்களிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நாளை மறுதினம் (5.11.2022) சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.