குனியமுத்தூரில் கிருஷ்ணா பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசிய சுபாஷ் சர்கார், மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் தொழில்நுட்பம் சார்ந்த அறிவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என கூறினார்.
கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 33-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகம் - சித்தூர் இயக்குனர் குழுவின் தலைவரும், நாஸ்காம் அமைப்பின் ஐசிசி கவுன்சிலின் முன்னாள் தலைவருமாகிய பாலசுப்பிரமணியம் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் சுபாஷ் சர்க்கார் பேசியதாவது, மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் தொழில்நுட்பம் சார்ந்த அறிவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இளைஞர்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம், ஸ்கில் இந்தியா திட்டம் ஆகியவை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதோடு மட்டுமில்லாமல் தொழில்முனைவோராகவும் அவர்களை உருவாக்குகிறது. பட்டம் பெரும் இளைஞர்கள் கல்வியறிவு மட்டுமின்றி நமது பாரம்பரியம், கலாச்சாரம் குறித்த அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசும் மாநில கல்வி கொள்கையின் மூலம் தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றி வருகிறது. ஆனால் அரசியல் நோக்கங்களுக்காகவே தேசிய கல்வி கொள்கை தமிழகத்தில் எதிர்க்கப்பட்டு வருகிறது. மத்திய கல்வித்துறை ஏற்கனவே அனைத்து மாநிலங்களுக்கும் சிறந்த கல்வி முறைகள் குறித்து பரிந்துரைக்க கேட்டுக்கொண்டுள்ளது.நாடு முழுவதும் நவோதயா வித்யாலயா பள்ளிகள் மிகவும் பிரபலமான கல்விமுறையாக இருந்து வருகிறது.
தமிழகத்தில் மத்திய கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று மாநில அரசு கேட்டுக்கொண்டால் உறுதியாக மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும்.
இவ்வாறு அவர் கூறினார்.