திமுக பேச்சாளர் சைதை சாதிக், அமைச்சர் மற்றும் மூத்த திமுக நிர்வாகிகள் முன்னிலையில் தமிழகப் பெண்களை மிகவும் கேவலமான வார்த்தைகளில் பேசியதற்கு, தமிழக மகளிரின் மாண்பைக் காக்கும் வகையில் திமுக தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரிக்கை வைத்துள்ளார்.
கோவை: சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக, திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
பாஜகவினர் கைது நடவடிக்கையை கண்டிக்கும் வகையில், கோவை காந்திபுரம் பகுதியில் பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி தலைமையில் பெண்கள் உட்பட 200 க்கும் மேற்பட்ட பாஜகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், சென்னையில் அண்ணாமலை உட்பட பாஜகவினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பாஜக மாநில துணைத் தலைவர் பேராசிரியர் கனகசபாபதி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், அண்மையில் திமுக பேச்சாளர் சைதை சாதிக், மாநில அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் பல மூத்த திமுக நிர்வாகிகள் முன்னிலையில் தமிழகப் பெண்களை மிகவும் கேவலமான வார்த்தைகளில் பேசியதற்கு திமுக தலைவர் மற்றும் மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மகளிரின் மாண்பைக் காக்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை குறிப்பிட்டிருப்பதாவது, திமுக பேச்சாளர் சாதிக், மாநில அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் பல மூத்த திமுக நிர்வாகிகள் முன்னிலையில், பாஜகவின் மூத்த பொறுப்பாளர்களான குஷ்பு சுந்தர், கௌதமி, காயத்ரி ரகுராம் உள்ளிட்ட நான்கு பெயர்களைக் குறிப்பிட்டு சொல்ல முடியாத வார்த்தைகளில் அசிங்கமாக பேசியுள்ளார்.
மேலும், உலகின் மாபெரும் கட்சியான பாஜக தமிழகத்தில் மேற்குறிப்பிட்ட மகளிர் பொறுப்பாளர்களை வைத்து வளர்ந்து வருவதாகத் தவறான வகையில் கூறியுள்ளார். அதேபோல, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் கேவலப்படுத்தியுள்ளார்.
பாஜக மகளிரைப் போற்றும் கட்சி. தேசத்தை தாயாக வழிபடும் கட்சி. மோடி அமைச்சரவையில் அதிகமான எண்ணிக்கையில் மகளிருக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சர். மோடி ஆட்சியில் பெண்கள் அதிக அளவில் பலன் பெற்று வருகின்றனர்.
அதே சமயம், திமுக தாய்க்குலத்தை தொடர்ந்து பல ஆண்டுகளாகவே இழிவுப்படுத்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. சாதிக்கின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திமுகவிடம் நியாயம் கேட்க சென்னை வள்ளுவர் கோட்டத்தில், பாஜக மகளிர் அணியினர் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில், கலந்து கொண்ட மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மகளிர் அணியினர், கட்சிப் பொறுப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், மகளிரை இழிவுப்படுத்திய சாதிக் இதுவரை கைது செய்யப்படவில்லை. நியாயம் கேட்ட அண்ணாமலை மற்றும் மகளிர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்காக திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.
மகளிரை இழிவுபடுத்திய சாதிக் கட்சியை விட்டு நீக்கப்பட்டு கைது செய்யப்பட வேண்டும். கூட்டத்தில் அந்த நபரைத் தடுத்து நிறுத்தாத அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் தமிழக பெண்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
திமுக தலைவர் மற்றும் மாநில முதல்வர் ஸ்டாலின் தமிழக மகளிரின் மாண்பைக் காக்கும் வகையில் உடனடியாக ல நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அறிக்கையில் தெரிவித்திருந்தார்.