கோவை - திருச்சி சாலையில் போலீசார் நடத்திய வாகன சோதனையில், கஞ்சா கடத்திச் சென்ற நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 1.150 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை: சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் கோவை மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், கோவை மாவட்ட காவல் காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் போலீசார், கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று சூலூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் போலீசார், கோவை - திருச்சி சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்ற நபரை பிடித்து சோதனை செய்தனர்.
அதில் அவர் அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய போதைப் பொருளான கஞ்சாவை விற்பனைக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 1.150 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், அவர், இருகூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மகன் தனபால் (24) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இளம் சமுதாயத்தினர் தற்செயலாகவோ, தவறுதலாக போதை பொருட்களை பயன்படுத்தி அவர்கள் அதற்கு முழுமையாக அடிமையாகி விடுகிறார்கள். வாழ்க்கை பாதையை மாற்றும் போதையின் பாதையில் செல்ல வேண்டாம் என காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு பொதுமக்கள் தயங்காமல் தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக 94981-81212 என்ற எண்ணில் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும், வாட்ஸ் ஆப் மூலம் 7708-100100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.