கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு கொள்ளை சம்பவத்தின் போது காவலாளி ஓம்பகதூரை அங்கிருந்த மரத்தில் கட்டிவைத்து கடுமையாக தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில், அந்த மரத்தை எஸ்டேட் நிர்வாகம் அனுமதியில்லாமல் அகற்றியுள்ளது.
நீலகிரி: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், காவலாளி ஓம்பகதூரை கொலை செய்து தலைகீழாக கட்டி வைக்கப்பட்ட மரத்தை எஸ்டேட் நிர்வாகம் வெட்டி அகற்றியது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் பொது சுகாதார நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,
கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ந்தேதி கொடநாடு பங்களாவில் கொள்ளையில் ஈடுபட்ட கனகராஜ், சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட் 11 பேர் கொண்ட கொள்ளை கும்பல் பங்களாவில் கொள்ளை அடிக்க 8-ஆம் நம்பர் கேட் வழியாக உள்ளே சென்றுள்ளனர்.
பங்களாவின் முன் நிறுத்தி வைக்கபட்டிருந்த லாரியில் இரவு காவலில் இருந்த கிருஷ்ண தாபாவை தாக்கி லாரியில் கட்டி வைத்த அவர்கள், பின்னர் 10-நம்பர் கேட்டில் இருந்த ஓம்பகதூரை அங்கிருந்த மரத்தில் தலைகீழாக கட்டி வைத்து கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர்.
தொடக்கத்தில் கோத்தகிரி போலிசார் விசாரித்த அந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்று கூறி ஏ.டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலிசார் விசாரித்து வந்தனர்.
இந்த விசாரணையில் ஓம்பகதூர் தலைகீழாக கட்டிவைத்து கொலை செய்யப்பட்ட மரத்தை எஸ்டேட் நிர்வாகம் வெட்டி அகற்றி இருப்பதும் அதற்கு பதிலாக புதிதாக மரக்கன்று ஒன்றை நட்டு வளர்த்து வருவதும் தெரிய வந்துள்ளது.
தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், மரம் வெட்டி அகற்றப்பட்டுள்ளது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.