கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை கண்டித்து கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட இந்து மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உட்பட்ட பலர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, இந்து மக்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து மக்கள் கட்சி சார்பில் கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன் குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை கோட்டை ஈஸ்வரன் கோயிலில் இன்று காலை 10 மணிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் சிவனடியார்கள் திரளாக கலந்து கொண்டு, தேவார பதிகங்கள் பாடி வழிபட்டனர்.
பழைய திமுக ஆட்சியில் மு. ராமநாதன், சி.டி. தண்டபாணி உள்ளிட்ட திமுகவினர் இஸ்லாமிய ஓட்டுக்காக கோவை கோட்டைமேடு காவல்துறை செக்போஸ்டை எடுத்து, அதன்பின் நடந்த கொடூர சம்பவங்களினால் கோவை ஒரு இருபது வருடம் பின்னோக்கி சென்றது வரலாறு.
மீண்டும் திமுக ஆட்சி 15 மாத காலமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் இருப்பதால் ஜிகாதிகள் செல்வாக்கு மீண்டும் அதிகரிக்கின்றது. திமுகவின் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகடசி, கம்யூனிஸ்ட்டுகள், திராவிட கழகங்கள் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து இஸ்லாமிய மதவாத அமைப்புகளோடு கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றார்கள்.
பி.எப்.ஐ அமைப்பு தடை செய்யப்பட்ட பிறகு கோவையில் தொடர் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றது. பாஜக, ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களின் வீடுகள் அலுவலகங்கள் குறிவைத்து தாக்கப்பட்டது. இதுகுறித்து திமுக கூட்டணி கட்சியினர் பாஜகவினரே இந்த நாடகத்தை நடத்துகிறார்கள் என்று மனசாட்சியே இல்லாமல் குற்றம் சாட்டினார்கள்.
நீதிமன்ற அனுமதியுடன் நடைபெறக்கூடிய ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நிகழ்ச்சியை திமுக அரசாங்கம் தடை செய்தது. தீபாவளி பண்டிகையின் மாண்பை குறைக்கும் வகையில் இலக்கு வைத்து சாராய விற்பனை நடைபெற்றது.
முதலமைச்சர் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லவில்லை. கோவையில் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து இதுவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.
தொடர்ந்து இந்து சமயத்தை அவமதித்து பேசி இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி வருகிறார்கள். ஆ ராசா, வீரமணி உள்ளிட்டோர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக அரசாங்கம் ஒருதலை பட்சமாக இந்து விரோதமாக ஆட்சி செய்து வருகின்றது. திமுக ஆட்சியில் பல கோயில் இடிப்பு சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது.
இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புகளோடு திமுக கூட்டணி கட்சியினர் நல்லுறவு பாராட்டி மத அடிப்படைவாத அமைப்புகளை வளர்த்து விடுகின்றனர். இதனால் ஊக்கம் பெற்ற இஸ்லாமிய மத அடிப்படை வாதிகள் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான துணிச்சலை பெற்றிருக்கிறார்கள்.
கோட்டைமேட்டில் ஒரு பாம் ஃபேக்டரியே இயங்கி வருவது போல் செய்திகள் வெளி வருகிறது. இத்தனையும் அந்த கோட்டை ஈஸ்வரனின் அருளால் தீபாவளி பண்டிகையை சீர்குலைக்க ஜிகாதிகளால் கொண்டு செல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிற குண்டு வெடித்ததினால் தான் வெளிவந்துள்ளது.
முதலில் காரில் இருந்த கேஸ் சிலிண்டர் தான் வெடித்தது என பூசி மறைக்கப் பார்த்தனர். பின் மெல்ல மெல்ல உண்மை வெளிவரத் தொடங்கியது. கார் குண்டு வெடிப்பில் இறந்த ஜமேஷா முபீன் வீட்டில் வெடிபொருட்கள் மூட்டை மூட்டையாக கைப்பற்றப்பட்டது.
முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோட்டை ஈஸ்வரன் அருளால் அந்த குண்டு மட்டும் தற்செயலாக வெடிக்காவிட்டால் கோவை மீண்டும் ஒரு இருபது வருடம் பின்னோக்கி சென்றிருக்கும். கோட்டை ஈஸ்வரனுக்கு நன்றிகள் தெரிவிக்கும் வகையில் சிறப்பு வழிபாடு இன்று காலை 9 மணிக்கு கோட்டை ஈஸ்வரன் கோயிலில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்றது.
நாங்கள் சைவர்கள் இந்துக்கள் அல்ல என்றெல்லாம் பிரச்சாரம் செய்து வரும் நாம் தமிழர், விடுதலை சிறுத்தை உள்ளிட்ட அமைப்புகள் 1500 ஆண்டுகால பழமையான சிவன் கோயில் மீது நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதல் குறித்து இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை. சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிடவில்லை. இவர்களின் இரட்டை வேடம் இதிலிருந்து அம்பலமாகிறது.
கோவையில் நடைபெற்ற இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து முதலமைச்சரோ, திமுகவோ, ஏனைய அரசியல் கட்சிகளோ இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை. சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிடவில்லை. இந்துக்கள் அரசியல் அனாதைகள் போன்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சி மட்டும் இந்த விஷயத்தில் இந்துக்களை பாதுகாக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கோவையை காக்க வேண்டும் என்றால் தேசிய கட்சியின் ஆட்சியில் கொங்கு மாநிலம் மட்டுமே தீர்வு. அதற்கு அந்த கோட்டை ஈஸ்வரனும், உக்கடம் லட்சுமி நரசிம்மனும், காவல் தெய்வம் கோனிஅம்மனும் அருள் பாலிக்க வேண்டும்.
கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக மாநில தலைவர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுக்க அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1998 பிப்ரவரி 14 கோவை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து கோவை மணிக்கூண்டு பூம்புகாரிலிருந்து கோட்டை ஈஸ்வரன் கோயில் வரை ஈஸ்வரன் கோயிலுக்கு செல்கின்ற சாலையில் பாதையின் இருபுறமும் பக்தர்களுக்கு இடையூறாக அமைந்திருக்கின்ற நடைபாதை கடைகள் தடை செய்யப்பட்டு இருந்தது.
கம்யூனிஸ்ட் கட்சியின் ஒத்துழைப்பு மூலம் மீண்டும் நடைபாதை கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகளின் உரிமையாளர்கள், பணி செய்வோர் உள்ளிட்டோர் மத அடிப்படைவாத அமைப்புகளோடு தொடர்புடையவர்களாக இருக்கின்றார்கள். இதன் காரணமாக கோயிலுக்கு என்றுமே ஆபத்து தான். தற்பொழுது இந்த குண்டு வெடிப்பில் பலியானவர் கூட இத்தகைய கடைகளில் பணியாற்றியவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாகவே ஆயிரம் ஆண்டுகால பழமையான கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு தோரணவாயில் அமைக்கின்ற திருப்பணி தடைபட்டு வருகிறது. கோவிலுடைய ராஜகோபுர திருப்பணியும் தடைபட்ட வருகிறது.
கோயிலுக்கு செல்லும் பாதையில் இருமருங்கிலும் விழா காலங்களிலும் பிரதோஷம் உள்ளிட்ட பூஜை காலங்களிலும் பக்தர்களுக்கு இடையூறாக இந்த நடைபாதை கடைகள் அமைந்திருக்கிறது. இவற்றை அகற்றுவதற்கான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
கோவையில் பயங்கரவாதிகளின் சதித் திட்டம் கோட்டை ஈஸ்வரன் அருளால் அவருடைய திருக்கோயில் வாசலிலேயே முறியடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவம் மற்றும் நடைபெற்றிருந்தால் கோவை மட்டுமல்ல தமிழகமே தாங்காது.
பாரத பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பெடுத்துக் கொண்ட பிறகு கடந்த ஏழு ஆண்டுகளில் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் கூட நடைபெறாமல் இந்தியாவை சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்.
ஆனால், தமிழகத்தில் திமுக ஆட்சி தங்களுக்கு அனுசரணையாக இருக்கிற காரணத்தினால் பயங்கரவாத அமைப்புகள் ஆக்கமும் ஊக்கமும் பெறுகின்றார்கள். இதுகுறித்து தமிழக முதலமைச்சர் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
சிறுபான்மையினரை ஆதரிப்பது என்பது வேறு, பயங்கரவாதிகளை ஆதரிப்பது என்பது வேறு, முதலமைச்சர் இந்த விஷயத்தில் தோல்வி அடைந்து விட்டார். இவ்வளவு பெரிய கொடூர சம்பவம் கோவையில் நடைபெற்ற பிறகும் இந்துக்கள் அமைதி காத்து வருகிறார்கள்.
இந்து இயக்கங்கள், காவல்துறைக்கும் புலனாய்வு அமைப்புகளுக்கும் முழு ஒத்துழைப்பை கொடுத்து வருகிறார்கள். கோவையில் இயல்பு நிலை திரும்பி விட்டது என அமைச்சர் சொல்கிறார் என்றால் அதற்கு முழு காரணம் இந்து இயக்கங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இருந்தாலும் இந்துக்களின் மீது நடந்த இந்த தாக்குதலை கண்டித்து ஜனநாயக முறையில் நாங்கள் இந்த அறவழிப் போராட்டத்தை நடத்துகிறோம். ஆனால், காவல்துறை தடை விதித்து எங்களை கைது செய்து இருக்கிறது.
தமிழக காவல்துறை திமுகவின் ஏவல் துறையாக செயல்படுகிறது. காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கின்றோம். தமிழகம் முழுக்க கைது செய்யப்பட்டுள்ள இந்து மக்கள் கட்சி தொண்டர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.