கோவையில் குப்பை எடுப்பதற்கு முதற்கட்டமாக 100 பேட்டரி வாகனங்கள் வாங்கப்படும் என தூய்மைப்பணியாளர்கள் கோரிக்கைகள் குறித்து நடைபெற்ற தொழிற்சங்கங்களுடான பேச்சுவார்த்தையில் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் உறுதியளித்துள்ளார்.
கோவை: மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர் முன்னிலையில் நேற்று கோயம்புத்தார் மாநகராட்சிக்கு சொந்தமான பிரதான அலுவலகக் கூட்டரங்கில் தூய்மைப்பணியாளர்கள் கோரிக்கைகள் குறித்து தொழிற்சங்கங்கள் உடன் பேச்சுவாத்தை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்ததாவது:
கோயம்புத்தூர் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப்பணியாளா்களின் வருகைப் பதிவேடு காலை 7.00 மணி வரை மட்டுமே வருகை பதிவு செய்து கையொப்பமிட அனுமதிக்கப்படும்.
மேலும் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு குப்பை எடுப்பதற்கு உதவும் விதமாக முதற்கட்டமாக 100 பேட்டரி வாகனங்கள் வாங்கப்படும்.
தூய்மைப்பணியாளர்களுக்கான வார விடுமுறை ஒருநாள் சுழற்சி முறையில் விடுமுறை வழங்கப்படும்.
ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களின் ஊதிய உயர்வு குறித்து மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் இறுதி முன்மொழிவுகள் வருகின்ற நவம்பர் 5ம் தேதிக்குள் அனுப்பி வைத்து உரிய தகவல் தொழிற்சங்க கூட்டமைப்பிற்கு தெரிவிக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா, பொது சுகாதாரக்குழு தலைவர் மாரிச்செல்வன், தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.