கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜாமத் கூட்டமைப்பினருடன் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட ஜமாத் அமைப்பினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்தனர்.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஜாமத் கூட்டமைப்பினருடான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவையில் நிலவி வரும் அசம்பாவித சூழல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், இந்த கூட்டத்தில், கோவை மாநகரில் ஏதேனும் தகவல் இருந்தால் மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல் துறைக்கும் தெரிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அனைத்து ஜமாத் அமைப்பினரும் இந்த சம்பவத்தை கண்டிப்பதாக தெரிவித்துள்ளனர் என கூறினார். ஒவ்வொரு இடத்திலும் காவல்துறையினர் அனைத்து மதத்தினரிடமும் கூட்டம் போடப்பட்டு வருவதாகவும் தற்போது அதனை இன்னும் வலுபடுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
பின்னர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேசிய மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், கோவை மாநகரில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் ரோந்து பணிகள், செக்போஸ்டுகள் அனைத்தும் 24 மணி நேரம் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அச்சம்பவம் நடந்த சில மணி நேரத்திற்குள்ளாகவே குற்றவாளிகளை காவல்துறை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ஆர்ப்பாட்டம் ,போராட்டம் போன்றவைகளுக்கான அனுமதி சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் ஆகியோர் பங்கேற்றனர்.