கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு நடந்த சம்பவம் கோவையில் தீபாவளிக்கு முதல் நாள், அதுவும் கோயில் முன்பு நடைபெற்ற இந்த சம்பவத்தை தமிழக அரசும், காவல் துறையும் சாதாரணமாக கடந்து சென்று விடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை டவுன்ஹால் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில் பழமை வாய்ந்த கோட்டை ஈஸ்வரன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் அருகே இன்றுஅதிகாலைந கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறி, தீப்பற்றி எரிந்து சம்பவத்தில் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்தார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தை குறித்து விசாரிக்க காவல்துறை உயர் அதிகாரிகள்தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்படி, 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தடவியல் நிபுணர்கள் குழு என விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன், காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து நடந்ததாக செய்திகள் வருகின்றன.கோவையில் தீபாவளிக்கு முதல் நாள், அதுவும் கோயில் முன்பு நடைபெற்ற இந்த சம்பவத்தை தமிழக அரசும், காவல் துறையும் சாதாரணமாக கடந்து சென்று விடக்கூடாது தெரிவித்துள்ளார்.
அவர் அறிக்கையில் தெரிவித்ததாவது, கோவை மாநகரம் ஏற்கனவே பயங்கரவாதிகளின் இலக்காக இருந்து வந்துள்ளது என்பதை அனைவரும் அறிவர்.
1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி, முன்னாள் துணை பிரதமர் திரு. அத்வானியை கொல்வதற்காக, கோவையில் பயங்கரவாதிகள் நடத்தியதொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது. அது தமிழகத்தின் இருண்ட வரலாறு.
சமீபத்தில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(பி.எப்.ஐ.) அமைப்பு கோவையில் வலுவாக இருந்து வந்துள்ளது. எனவே, கோவையில் அதிகாலையில் நடந்த காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், அது ஏதாவது பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னோட்டமா..? என்பது உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் காவல்துறை தீவிரமாக விசாரிக்க வேண்டும்.
இதனை ஒரு விபத்து என்ற கோணத்தில் மட்டும் போலீசார் அணுகி விடக்கூடாது என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில், இனியொரு பயங்கரவாத சம்பவத்தை தாங்கும் சக்தி கோவைக்கும், தமிழகத்திற்கும் கிடையாது.
எனவே, இது பயங்கரவாத தாக்குதலாக இருந்தால் அதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். தேவைப்பட்டால் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.)விசாரணைக்கு தமிழக அரசு மாற்ற வேண்டும். காவல்துறைக்கு பொறுப்பு வைக்கும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நேரடியாக தலையிட்டு விசாரணையை முடுக்கி விட வேண்டும் என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.